விக்கிரவாண்டி இடைத் தேர்தல்.. அதிமுகவைப் போல புறக்கணித்தது தேமுதிக!
சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடாமல் அதிமுக புறக்கணித்துவிட்ட நிலையில் அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். ஜூலை 13-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி 40 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுதியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் அபிநயா ஆகியோர் களம் காண்கின்றனர்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது பெரும் விவாதத்துக்குரியதாகி இருக்கிறது. அதிமுகவுக்கு உரிமை கோருகிறவர்களிடையே இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிக என்ன முடிவை எடுக்கும் என்பதும் எதிர்பார்ப்புக்குரியதாக இருந்தது.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியானது விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ளது. லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ரவிக்குமார் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் 72,188 வாக்குகளைப் பெற்றார். அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் 65,365 வாக்குகளையும் பாமகவின் முரளி சங்கர் 32,198 வாக்குகளையும் பெற்றிருந்தார். இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக போட்டியிட்டால் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது. இதனால் அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிக, விக்கிரவாண்டியில் களமிறங்குமா? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
தற்போது தேமுதிகவும் விக்கிரவாண்டி இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications