முதலில் ப்ளூடூத்.. இப்போ ஆள்மாறாட்டம்! சென்னை சுங்கத்துறை தேர்வு! அடுத்தடுத்து சிக்கிய வடமாநிலத்தவர்
சென்னை: தலைநகர் சென்னையில் நடந்த சுங்கத் துறை தேர்வில் வடமாநில இளைஞர்கள் ப்ளூ டூத் அணிந்து மோசடி செய்து மட்டுமின்றி ஆள்மாறாட்டத்திலும் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுங்கத்துறை அலுவலகம் தலைநகர் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இங்கே கிளார்க், கேண்டீன் அட்டெண்டர், டிரைவர் உள்ளிட்ட 17 காலி இடங்கள் உள்ளனர். 10வது/ 12வது கல்வித்தகுதி உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், பல ஆயிரம் இதற்கு விண்ணப்பித்தனர்.

வெறும் 17 காலியிடங்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மொத்தம் 12 ஆயிரம் இளைஞர்கள் இதில் விண்ணப்பித்தனர். அவர்களில் இருந்து 1600 பேர் தேர்வு செய்யப்பட்டு எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
சுங்கத்துறை தேர்வு: நேற்றைய தினம் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் இந்த எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி வட மாநிலத்தில் இருந்தும் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர். அதில் இளைஞர் ஒருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அதிகாரிகள் அவரை பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது தான் அவர் காரில் ப்ளூ டூத் கருவி வைத்திருந்தது தெரிய வந்தது.
காதில் ப்ளூ டூத் அணிந்த அந்த நபர், வயிற்றில் சிம்கார்டு கொண்ட கருவியை ஓட்டியுள்ளார். அதன் மூலம் கேள்விகளுக்கு வெளியே இருந்து ஒருவரிடம் பதிலைக் கேட்டு இவர் தேர்வு எழுதியது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மட்டுமின்றி பலரும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் தேர்வு எழுத வந்த பல இளைஞர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ப்ளூ டூத் மோசடி: இதில் ஹரியானாவைச் சேர்ந்த சுமார் 30 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தனர். .அவர்களிடம் இருந்த ப்ளூ டூத் மற்றும் சிம்கார்டு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆஜராக வேண்டும் என்று எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். அவர்களுக்கு வெளியே இருந்து உதவியது யார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே தேர்வில் நடந்த மற்றொரு முறைகேடு குறித்து இப்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நேற்று நடந்த சுங்கத்துறை தேர்வில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஷேர் சிங் என்ற தேர்வு எழுதியிருக்க வேண்டும். ஆனால், அவருக்குப் பதிலாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷர்வன் குமார் என்பவர் தேர்வு எழுதியுள்ளார். இதைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அவரையும் வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஆள்மாறாட்டம்: அதைத் தொடர்ந்து ஆள்மாறாட்டம் செய்த ஷர்வன் குமார் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். எப்படியாவது அரசுப் பணி கிடைக்க வேண்டும் எனப் பல லட்சம் இளைஞர்கள் தொடர்ந்து படித்து வருகிறார்கள்.
அப்படியிருக்கும் போது வடமாநிலத்தவர் இப்படி தொடர்ச்சியாக மோசடி செய்யும் சம்பவங்கள் இளைஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications