டெல்லி, மே.வங்காளத்தை தொடர்ந்து.. தமிழகத்திலா? ஸ்டாலின் அஞ்சுவது இல்லை! மத்திய அரசை சாடிய பொன்முடி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பார்த்தார். அதன்பிறகு அவர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைகளை நிர்வகித்து வருகிறார். சமீபத்தில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக், செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்தது.

இதையடுத்து நேற்று அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்தது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனையை மேற்கொண்டனர். மேலும் தலைமை செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் முடிவில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் செந்தில் பாலாஜி கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே தான் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் உயரதிகாரிகளுடன் காலை முதல் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த விஷயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள், ஆதரவாளர்கள் கரூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். இதற்கிடையே தான் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சர்கள் மருத்துவமனையில் பார்த்து வருகின்றனர். செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் பார்த்த பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது பொன்முடி கூறியதாவது: அமலாக்கத்துறை டெல்லி, கர்நாடகாவை, மேற்கு வங்காளத்தில் இருந்த நடவடிக்கை தமிழகத்தில் தொடங்கி உள்ளது. இதற்கெல்லாம் தமிழக முதல்வர் அஞ்சுவது இல்லை. அனைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளையும் தாங்கும் ஆற்றலும், திறமையும் திமுகவுக்கு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது எங்களை எல்லாம் பழிவாங்குவதற்காக கடந்த காலங்களிலும் நடந்துள்ளது. முதல்வர் ஸ்டாலினை எல்லாம் மிசாவில் பழிவாங்கியவர்கள் உண்டு. எதாக இருந்தாலும் அவைகளை எல்லாம் எதிர்கொள்வோம். ஒன்றிய அரசின் பொய்பிரசாரத்தையும், அரசியலுக்காக செய்கின்றன இந்த நிகழ்வுகளையும் தமிழக மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர்'' என சாடினார்.












Click it and Unblock the Notifications