2 வழக்குகளில் அடுத்தடுத்து விடுதலையான பொன்முடி! இப்போ சட்டவிரோத பண பரிமாற்ற புகாருடன் அமலாக்கத்துறை!
சென்னை: சொத்து குவிப்பு மற்றும் நில அபகரிப்பு வழக்குகளில் அடுத்தடுத்து விடுதலையான தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி, தற்போது சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாருடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த விவகாரம் நீண்ட சட்ட சிக்கல்களை எதிர்கொண்டு தற்போதுதான் ஒருவிதமாக ஓயத் தொடங்கியது. இந்த நிலையில் விழுப்புரத்தில் பதிவான வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதா என்பதை அடிப்படையாக கொண்டு மற்றொரு தமிழ்நாடு அமைச்சரான பொன்முடி வீடு உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதுவும் நில அபகரிப்பு வழக்கு, சொத்து குவிப்பு வழக்கு ஆகியவற்றில் அடுத்தடுத்து அமைச்சர் பொன்முடி நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது அமலாக்கத்துறை புதிய வழக்கில் சோதனை நடத்தி வருகிறது.

நில அபகரிப்பு வழக்கு: 2001-ல் சென்னை சைதாப்பேட்டை ஶ்ரீநகர் வடக்கு காலனியில் அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தார் என்பது ஒரு வழக்கு. 2003-ம் ஆண்டு முதல் நடைபெற்ற இந்த வழக்கில் அண்மையில் நீதிபதி ஜெயவேல் தீர்ப்பளித்தார். அமைச்சர் பொன்முடி மீதான புகார்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போதுமான ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை; பொன்முடி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இவ்வழக்கு வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது இந்த வழக்கிலும் போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாத நிலையில் பொன்முடி, அவரது மனைவி விடுதலை செய்யப்பட்டனர்.
சட்டவிரோத பண பரிமாற்றம்: இரண்டு வழக்குகளிலும் அடுத்தடுத்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட நிலையில் தற்போது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாரை கையில் எடுத்துள்ளது. அதாவது விழுப்புரத்தில் பதியப்பட்ட வழக்கில் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா என்பதை கண்டறிய தற்போது பொன்முடிக்கு சொந்தமான பல இடங்களில் துணை இராணுவப் படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications