அதிமுக பொதுக்குழுவில் அவமானம்... இன்று இரவு டெல்லி செல்லும் ஓ பன்னீர் செல்வம்! பரபர பின்னணி
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் இன்று அவமானப்படுத்தப்பட்டார். இந்நிலையில் தான் ஓ பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் எம்பி, மனோஜ்பாண்டியன் உள்பட 4 பேருடன் இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார். இந்த பயணத்தின் பின்னணி விவரம் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கடுமையான கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மோதல் உருவாகும் சூழல் நிலவியது. இவை அனைத்துக்கும் காரணம் அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரம் தான்.
இதற்கு ஓ பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் ஓ பன்னீர்செல்வம் இன்று பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது.

ஓ பன்னீர்செல்வத்துக்கு அவமரியாதை
மேலும் ஜூலை 11ம் தேதி உண்மையான பொதுக்குழு நடக்கும் அன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் மிகவும் மோசமாக நடத்தப்பட்டார். அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் பொதுக்குழுவில் இருந்து பாதியில் வெளியேறிய ஓ பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் மற்றும் காகிதம் வீசப்பட்டது. இருப்பினும் அவர் கூட்டத்தில் இருந்து வெளியேறி வெளியே சென்றார்.

பாஜக தலைவர்கள் சந்திப்பு
இதையடுத்து தான் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினர். இந்நிலையில் தான் ஓ பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி இடையேயான பிரச்சனை குறித்து பாஜக தலைவர்கள் சமாதானம் செய்து பேசியதாக தகவல்கள் வெளியாகின.

ஜெயக்குமார் விளக்கம்
இது ஒருபுறம் இருக்க ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு வழங்ககோரியதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இந்த சந்திப்பு குறித்து அதிமுக, பாஜக தரப்பில் யாரும் விளக்கம் அளிக்கவில்லை. இருப்பினும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தான் சந்திப்பு நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

டெல்லி செல்லும் ஓ பன்னீர்செல்வம்
இந்நிலையில் தான் இன்று இரவு ஓ பன்னீர் செல்வம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஓ பன்னீர் செல்வத்துடன், அவரது மகனும் எம்பியுமான ரவீந்திரநாத் எம்பி, மனோஜ் பாண்டியன் உள்பட 4 பேர் செல்ல உள்ளனர். இதற்கான விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அவமானப்படுத்தப்பட்ட நிலையில் அவரது டெல்லி பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

காரணம் என்ன?
முதற்கட்ட விசாரணையில் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர்திரெளபதி முர்மு நாளை டெல்லியில் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார். இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருக்கு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்றுத்தான் ஓ பன்னீர்செல்வம் டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பயணத்தின்போது அவர் பாஜக உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பொதுக்குழுவில் நடந்த சம்பவம் குறித்து ஓ பன்னீர்செல்வம் புகாரளிக்கலாம் என கூறப்படுகிறது.

எடப்பாடி தரப்பில் என்ன?
இதற்கிடையே தான் திரெளபதி முர்மு வேட்பு மனுத்தாக்கலுக்காக எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் இன்று இரவு சில நிர்வாகிகள் டெல்லி செல்லலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இதுபற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications