விசிக திருமாவை தொடர்ந்து திமுகவை சீண்டும் காங்கிரஸ் செல்வப் பெருந்தகை...அப்ப "மநகூ 2.0" உறுதி?
சென்னை: திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொடர்ந்து காங்கிரஸும் அதிருப்தி குரலை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை அழைப்பதாக அறிவித்தார் அக்கட்சித் தலைவர் திருமாவளவன். தற்போது, பரமக்குடி இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவில் உரிய பாதுகாப்பை போலீஸ் வழங்கவில்லை என பகிரங்கமாக திமுக அரசை விமர்சித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை.
2021 சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் இடம் பெற்றிருந்தன. இந்தக் கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. இதே விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தேமுதிக தலைவராக இருந்த விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி திமுக வெற்றியைத் தடுத்திருந்தன. ஆனாலும் திமுக தலைமை வலிமையான கூட்டணியை உருவாக்க இந்த கட்சிகளை அரவணைத்துக் கொண்டது. இதே கூட்டணி லோக்சபா தேர்தலையும் சந்தித்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.

போக்கிடம் இல்லாத திமுக கூட்டணி கட்சிகள்: அதேநேரத்தில் 2021 சட்டசபை தேர்தல் மற்றும் 2024 லோக்சபா தேர்தல்களில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பகிர்ந்து கொடுப்பதில் திமுக 'கறாராக' இருந்தது. இது அப்போது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இன்னொரு பக்கம், பாஜகவுடன் அதிமுக கை கோர்த்து நின்றிருந்தது; பின்னர் விலகுவதாக அறிவித்தாலும் இரு கட்சிகளிடையேயும் திரைமறைவு உறவு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதனால் திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு 'போக்கிடம்' இல்லாமல் கொடுத்த சீட்டுகளை வாங்கிக் கொண்டு மவுனமாகின.
2026 சட்டசபை தேர்தல் களம்: ஆனால் 2026 சட்டசபை தேர்தல் களம் அப்படியானதாக இருக்கப் போவது இல்லை. அண்ணா திமுக, பாஜக இடையேயான உறவு முறிந்தது முறிந்ததுதான். இரு கட்சிகளும் கடுமையாக மோதிக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் கருணாநிதி சிலை திறப்பு, கருணாநிதி நாணயம் வெளியீடு என அடுத்தடுத்த நிகழ்வுகளில் பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாக விமர்சனங்கள் எழ திமுகவே காரணமாகவும் ஆகிவிட்டது. அண்ணா திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவை தவிர வேறு வலிமையான கட்சிகளும் இல்லை. இதனால் இயல்பாகவே திமுகவின் பிடியில் இருந்து கூட்டணிக் கட்சிகள் வெளியேறி அண்ணா திமுக பக்கம் போகவே துடிக்கின்றன. அண்ணா திமுகவும் திமுகவின் வலிமையான கூட்டணி உடைந்தால் தேர்தல் களத்தில் தங்களுக்கு மிகப் பெரும் சாதகம் என காத்திருக்கிறது. இதனால் திமுக கூட்டணியை விட்டு வெளியே வரும் கட்சிகளுக்கு தொகுதிகளை 'தாராளமாக' வாரி வழங்கவும் தயாராக இருக்கிறது.
அதிமுகவை அழைத்த திருமாவளவன்: இந்த சூழ்நிலையை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் கூட்டணியில் தற்போது இருக்கும் விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுகவின் நிலைப்பாடு. இதனால் திமுகவை விட்டு விலகவும் இந்த கட்சிகள் தயாராகி வருகின்றன. இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் கள்ளக்குறிச்சி மது ஒழிப்பு மாநாட்டுக்கு அண்ணா திமுகவுக்கு பகிரங்கமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது.
போலீஸ் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு: இதனைத் தொடர்ந்து இன்று பரமக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, பரமக்குடியில் இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவில் பங்கேற்ற தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்காமல் போலீசார் அலட்சியம் காட்டுவதாக பகிரங்கமாகவே விமர்சித்துள்ளார்.
மநகூ 2.0 : திருமாவளவன், செல்வப்பெருந்தகையைத் தொடர்ந்து இடதுசாரிகளும் திமுகவை விமர்சிக்கத் தொடங்கக் கூடும் என்றே கணிக்கப்படுகிறது. அண்ணா திமுகவை முன்னிறுத்தி மீண்டும் ஒரு மக்கள் நலக் கூட்டணி (மநகூ 2.0) உருவாகிறது என்பதற்கான முன்னோட்டமாகவே இந்த போக்கும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications