மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி! வலுக்கும் சந்தேகங்கள்; பாயிண்ட் பை பாயிண்ட்!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன. ஆளும் பாஜக கூட்டணி இதுவரை பல மாநிலங்களில் தனது கூட்டணியை உறுதி செய்யவில்லை.
ஆனால், மோடி எதிராகக் களம் இறங்கி உள்ள காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' பல மாநிலங்களில் தங்களின் கூட்டணியை உறுதி செய்துவிட்டது. இந்தக் கூட்டணியில் தற்போதைய நிலவரப்படி 28 கட்சிகள் உள்ளன.

அதன் அடுத்த கட்டமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 'இந்தியா' கூட்டணி தங்களின் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாவிகாஸ் அகாடி எனக் கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் சிவசேனா ஆகிய கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அம்மாநிலத்தில் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரசும், சிவசேனாவும் தலா 20 தொகுதிகளைப் பகிர்ந்துகொண்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. அதைப்போன்று சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 6 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

டெல்லியைப் பொறுத்தளவில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. அதில் 3 தொகுதிகளைக் காங்கிரசுக்கு விட்டுத்தர ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. பஞ்சாபில் உள்ள மொத்தம் 13 தொகுதிகளில் 6 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியில் ஆம் ஆத்மி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்காகக் குஜராத், அரியானா, கோவா ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களைக் கேட்டுள்ளதாகவும் டெல்லி வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டு வருகிறது. இதற்காகக் கர்நாடக மாநிலத்தில் காங்கிரசுடன் இனைந்து செயல்பட ஆம் ஆத்மி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு மாறாக சில மாநிலங்களில் ஏற்கெனவே இருந்த கூட்டணியை பாஜக இழந்துள்ளது. அதற்குச் சரியான உதாரணம் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு.
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியைப் பலமாக நம்பி வந்த பாஜக இப்போது அதனை இழந்திருப்பது மிகப்பெரிய சருக்கலாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்நிலையில்தான் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. அதில் வழக்கம்போல் அதிமுக கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியில் நடக்கும் வழக்கமான நடைமுறைதான் இது.
ஆனாலும், இறுதி வரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக எடப்பாடி பழனிசாமி நிற்பாரா? என்பது சந்தேகமாக உள்ளது. காரணம், பாஜகவைச் சேர்ந்த பியூஷ் கோயல் தமிழ்நாட்டில் முகாமிட்டுள்ளார். அவர் அதிமுகவை இழுக்கும் வேலைகளில் இறங்கி உள்ளார் என்று செய்திகள் கசிந்து வருகின்றன.
அவர் சமரசத்திற்கான கதவு திறந்தே உள்ளது என்று இருப்பதை மிகக் கவனமாகப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே மீண்டும் அதிமுக- பாஜக இடையே கூட்டணி மலரும் என்று பேச்சு கேட்கத் தொடங்கி உள்ளது.
அப்படி ஒருநிலை வருமா? மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் சில முக்கியமான சந்தேகங்களை முன்வைக்கிறார்.

"இந்தப் பிரிவு என்பதே அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துவிட்டு வந்த பின்னர் நடைபெற்ற பிரிவு. அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பதை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. அதன்பின்னர் எஸ்டிபிஐ கட்சியின் மாநாட்டில் பழனிசாமி பங்கேற்றுள்ளார். எஸ்டிபிஐ கட்சியின் கொள்கை மீண்டும் மோடி ஆட்சிக்கு வரக் கூடாது என்பதாக இருக்கிறது.
அந்தக் கொள்கையை அதிமுக ஏற்கிறதா என்பது இதுவரை விளக்கப்படவில்லை. அந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் பேசுவதற்கு முன்பாகவே பேசிவிட்டு வந்துவிட்டார். ஆனால், மோடியைக் கண்டித்து அந்த மாநாட்டில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. அதைக் காதுகொடுத்துக் கேட்கக்கூட இல்லை எடப்பாடி பழனிசாமி. அதற்கு முன்பே புறப்பட்டுவிட்டார்.
சிறுபான்மையினர் ஓட்டு எனக்குக் கிடைக்கும் என்கிறார் பழனிசாமி. அவர் சிஏஏவை ஆதரித்தார். முத்தலாக்கை ஆதரித்தார். ஆக, சிறுபான்மையினர் அதிமுக பக்கம் வருவதற்கான காரணங்கள் வலுவாக இல்லை. திமுகவைச் சிறுபான்மையினர் வெறுப்பதற்கான காரணமும் வலுவாக இல்லை.

பாஜகவை விட்டு அதிமுக பிரிந்ததற்கான காரணங்களும் வலுவாக இல்லை. ஆகவே இவர்கள் மீண்டும் இணைவார்கள் என்ற சந்தேகம் வலுத்துக் கொண்டே வருகிறது" என்கிறார்
தொடர்ந்து பேசிய அவர், "2019 இல்கூட பாஜக கூட்டணி என்பது வேண்டாம் என்றுதான் அதிமுக தொண்டர்கள் பெரும்பாலானவர்கள் விரும்பினார்கள். ஆனால், தலைவர்கள் விருப்பம் அப்படி இல்லை. அவர்கள் பாஜகவுடன் தொடர்ந்து கூட்டணியை வைத்துவந்தார்கள்.
இந்த 2024 தேர்தல் போது பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்பதே அதிமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள். இந்த முறை தொண்டர்கள் விருப்பமும் தலைவர்கள் விருப்பமும் ஒன்றாக உள்ளது. ஆகவே, எடப்பாடி பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்து வந்திருக்கிறார்.
எடப்பாடி பாஜகவுடன் இருந்த கூட்டணியை விலக்கிக் கொண்ட பிறகு பாமகவோ அல்லது புதிய தமிழகமோ, தேமுதிகவோ, ஜான் பாண்டியனோ யாருமே இதுவரை அதிமுக கூட்டணியை ஆதரிப்பதாகச் சொல்லவில்லை.

ஒருமுறை ஜெயலலிதா சொன்னார், கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எதிரிகளே தெரிவில்லை என்று. இப்போது எடப்பாடி கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கூட்டணிக் கட்சிகள் எதுவும் தெரிவதைப் போல் நம்மால் பார்க்க முடியவில்லை.
எடப்பாடி 'இந்தியா' கூட்டணியிலிருந்து சில கட்சிகள் பிரிந்து தங்களுடன் கூட்டணிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார். அந்த 'இந்தியா' கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒருமித்த கொள்ளை மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதாக உள்ளது.
அந்தக் கொள்கையோடு எடப்பாடி ஒத்துப் போவாரா என்பது சந்தேகம். இப்போதைக்கு எஸ்டிபிஐ கட்சி மட்டும்தான் அதிமுகவுடன் உள்ளது. தற்போதைக்கு எடப்பாடிக்கு அது மட்டுமே சாதகமாக உள்ளது.

வரும் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தனித்தனியே போட்டியிட்டால் அது இரு கட்சிகளுக்கும் பயன் தராது. இருவரும் இணைந்து நின்றால், திமுக கூட்டணியைக் கடுமையாக எதிர்க்க முடியும்.
பாஜகவும் அதிமுகவும் மீண்டும் கூட்டணி வைக்கமாட்டார்கள் என்பதை உறுதியாகச் சொல்வதற்கில்லை. தேர்தல் நேரத்தில் அந்தத் திரை கண்டிப்பாக விலகும்" என்கிறார்












Click it and Unblock the Notifications