அதிருப்தியில் செங்கோட்டையன்.. சமாதான தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி.. சட்டப்பேரவையில் நடந்தது என்ன?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை தவிர்த்து அதிருப்தியில் உள்ள செங்கோட்டையனிடம், அதிமுகவின் 5 முக்கிய நிர்வாகிகள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடம்பூர் ராஜு, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அன்பழகன், எஸ்பி வேலுமணி மற்றும் காமராஜ் உள்ளிட்டோர் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்திகடவு அவினாசி திட்டத்திற்காக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதன்பின் எடப்பாடி பழனிசாமியின் பெயரை ஒருமுறை கூட சொல்லாமல் செங்கோட்டையன் தவிர்த்து வருகிறார். சென்னையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

அதுமட்டுமல்லாமல் கோவையில் நடந்த எஸ்பி வேலுமணி மகன் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட போதும், செங்கோட்டையன் சந்திக்கவில்லை. தொடர்ந்து சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
இன்றைய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும், சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் ஏன் என்னை சந்திக்க மறுக்கிறார் என்பதை செங்கோட்டையனிடம் கேளுங்கள். அதிமுகவில் அனைவருக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்று பதில் அளித்தார்.
இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இருவருக்கும் சுமூக உறவு இல்லை என்பது உறுதியாகியது. எடப்பாடி பழனிசாமியின் கருத்து தொடர்பாக செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் பதில் அளிக்க மறுத்தார். இதனிடையே சட்டப்பேரவையில் செங்கோட்டையனை சமாதானம் செய்யும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்ட சம்பவம் தெரிய வந்துள்ளது.
அதிமுக எம்எல்ஏ-க்கள் இருந்த அறையில் எடப்பாடி பழனிசாமி இருந்ததால், அங்கு செல்லாமல் தவிர்த்து சபாநாயகர் அறையில் செங்கோட்டையன் அமர்ந்திருந்தார். இதன்பின் பேரவை நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பாக நேராக தனது இடத்திற்கு சென்று செங்கோட்டையன் அமர்ந்திருந்தார். வழக்கமாக உடனிருக்கும் அதிமுக நிர்வாகிகளுடன் செங்கோட்டையன் உரையாடுவது வழக்கம்தான்.
ஆனால் இன்றைய பேரவை நடவடிக்கைகளின் போது செங்கோட்டையன் யாரிடமும் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான கடம்பூர் ராஜு, கேபி அன்பழகன், எஸ்பி வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காமராஜ் உள்ளிட்ட 5 முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் அருகே சென்று அமர்ந்து சமாதானம் பேசியுள்ளனர்.
செங்கோட்டையன் பொறுப்பு வகிக்கும் மாவட்டத்தில் அவரை கேட்காமல் எடப்பாடி பழனிசாமி சில நிர்வாகிகளை நியமனம் செய்ததே இந்த கருத்து வேறுபாட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் சூழலில், அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக மோதுவது அக்கட்சியினர் இடையே விவாதமாகி வருகிறது.












Click it and Unblock the Notifications