தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி.. எடப்பாடி பழனிசாமியே தலைமை.. அமித் ஷா அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் நடக்கவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி இயல்பாக அமைந்த கூட்டணி என்று கூறிய அமித் ஷா, அதிமுக தரப்பில் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
2 நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி உறுதி செய்துள்ளார். தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதன்பின் சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் செய்தியாளர்கள சந்திப்பு நடைபெற்றது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. தேசிய அளவில் நரேந்திர மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கூட்டணி செயல்படுகிறது.
1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி இணைந்து 30 தொகுதிகளில் வென்றது. அதன்பின் மீண்டும் இயல்பாக அமைந்துள்ள கூட்டணி இது. இந்த கூட்டணிக்காக அதிமுக தரப்பில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. அதிமுக - பாஜக என்பது உறுதியான கூட்டணியாகும். இதில் எந்த குழப்பமும் கிடையாது.
2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான். இரு கட்சிகளும் சேர்ந்தே ஆட்சி செய்யும். யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்பதை பிறகு முடிவு செய்வோம். தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக டாஸ்மாக் ஊழல், மணல் கொள்ளை ஊழல், பணமோசடி உள்ளிட்டவை மூலமாக சுமார் ரூ.40 ஆயிரம் கோடியில் ஊழல் செய்துள்ளது.
அதேபோல் மக்களை குழப்புவதற்காக திமுகவினர் தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை உள்ளிட்ட விவகாரங்களை கிளப்பி வருகிறார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து அமர்ந்து ஒரு முடிவை எடுப்போம். தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் பாஜக கவுரவமாக கருதுகிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications