இதற்குத்தான் 10.5% உள் ஒதுக்கீடு, ராஜ்ய சபா சீட்டா?.. தென் மாவட்ட ஓட்டையும் இழந்தோமே.. அதிமுக கோபம்!
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக பாமக இப்படி திடீரென கூட்டணியை முறித்துக்கொண்டு சென்றது அதிமுக தரப்பை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளதாம்.. அதிமுகவின் முக்கிய தலைகள் சிலர்.. பாமகவின் இந்த முடிவு காரணமாக அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போகிறோம், எங்கள் கட்சியின் வளர்ச்சியை, நன்மையை கருத்தில் கொண்டு இப்படி முடிவு எடுக்கிறோம் என்று பாமக அறிக்கை வெளியிட்டு, அதிமுகவுடனான கூட்டணியை முறித்துள்ளது.
அதிமுகவுடன் கடந்த சில வாரங்களாக பாமக இணக்கமாக இல்லாத நிலையில் தற்போது கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் திமுகவின் அறிவிப்புகளை பாராட்டி, முதல்வர் ஸ்டாலினை பாராட்டி திமுகவிற்கு நட்பு அழைப்பு விடுத்துக் கொண்டு இருந்த பாமக தற்போது முத்தாய்ப்பாக அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டு உள்ளது. பாமகவின் வெளியேற்றத்தால், அதிமுக சட்டசபை தேர்தலின் போது செய்த பல விஷயங்கள் தற்போது அர்த்தமற்றதாகி உள்ளது.

அர்த்தம் இல்லை
சட்டசபை தேர்தலின் போதும் சரி, லோக்சபா தேர்தலின் போதும் சரி அதிமுக தனது கூட்டணியில் பாஜகவை விட பாமகவுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்தது. பாஜகவிற்கு லோக்சபா தேர்தலில் 5 இடங்களை அதிமுக கொடுத்தது, ஆனால் பாமகவுக்கு 7 இடங்கள் கொடுக்கப்பட்டது. அதேபோல் சட்டசபை தேர்தலில் பாமக 23 இடங்களை அதிமுக கூட்டணியில் பெற்றது. பாஜக 20 இடங்களே பெற்றது. இந்த தொகுதி ஒதுக்கீடு பாமகவை அதிமுக எவ்வளவு பெரிதாக நினைத்தது என்பதற்கு உதாரணம். பாஜகவை விட பாமகதான் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சி என்பதை அதிமுக அழுத்தம் திருத்தமாக இந்த இரண்டு தேர்தலிலும் பதிவு செய்தது.

பாமகவை சுற்றி அதிமுக பிளான்
அதிமுகவின் இரண்டு தேர்தல் திட்டங்களும் பாமகவை சுற்றியே சென்றது. லோக்சபா தேர்தலில் பாமகவிற்கு என்று ராஜ்ய சபா எம்பி சீட்டை தூக்கி கொடுத்தது அதிமுக. இதில் அன்புமணி எம்பி ஆன நிலையில் லோக்சபாவில் ஒரு இடத்தை கூட பாமகவால் வெல்ல முடியவில்லை. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வடமாவட்டங்களில் கூட பாமகவால் அதிமுகவிற்கு எந்த பலனும் ஏற்படவில்லை. டாக்டர் செந்தில்குமார் போன்றவர்களை நிறுத்தியும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் போன்றவர்களை பிரச்சாரம் செய்ய வைத்தும் பாமகவை திமுக எளிதாக சமாளித்தது.

பாமக வன்னியர்
பாமகவின் வன்னியர் ஆதரவு லோக்சபா தேர்தலில் அதிமுகவிற்கு பலன் அளிக்கவில்லை என்றாலும் அதிமுக பாமக மீதான நம்பிக்கையை இழக்கவில்லை. பாமகவை நம்பித்தான் அதிமுக அடுத்த சட்டசபை தேர்தலிலும் வியூகம் வகுத்தது. பாமகவின் வேண்டுகோள் மற்றும் தூண்டுதலால் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்தது. தேர்தலில் இது வன்னியர் வாக்குகளை தங்கள் கூட்டணி பக்கம் கொண்டு வரும் என்று அதிமுக நம்பியது. ஆனால் வன்னியர் வாக்குகள் எதிர்பார்த்தபடி அதிமுகவிற்கு கிடைக்கவில்லை. இது தேர்தல் ஜிம்மிக்ஸ்,.. உண்மையில் தர மாட்டார்கள் என்று நினைத்து வன்னியர்களும் அதிமுகவிற்கு ஓட்டு போடவில்லை... இன்னொரு பக்கம் மற்ற இடைநிலை சாதியினரும் அதிமுக மீது இதனால் அதிருப்தி அடைந்தனர்.
Recommended Video

அதிருப்தி
அதிமுகவிற்கு முக்குலத்தோர் உள்ளிட்ட மற்ற ஜாதி பிரிவினர் வாக்குகளும் வன்னியர் ஒதுக்கீடு காரணமாக கிடைக்காமல் போனது. தென் தமிழகத்தில் மொத்தமாக அதிமுக அடி வாங்க இது காரணமாக அமைந்தது. இது மிகப்பெரிய அரசியல் ரிஸ்க் என்றே பார்க்கப்பட்டது. அதிமுகவிற்கு உள்ளேயே சிலர் இந்த வன்னியர் உள்ஒதுக்கீடு மூவை எதிர்த்த நிலையில் பாமகவை நம்பி எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பில் உறுதியாக நின்றார். இத்தனைக்கும் பாமக மீது அவர் வைத்த நம்பிக்கைதான் காரணம். பாமகவிற்காக மிகப்பெரிய ரிஸ்க்கை அப்போது அதிமுக எடுத்த நிலையில் தேர்தலுக்கு பின் இப்படி திடீரென பாமக தனது கூட்டணியை முறித்துக்கொண்டு இருப்பது அதிமுக தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதிமுக புலம்பல்
பாமகவிற்காக இவ்வளவு செய்தோமே.. தேர்தலில் மிகப்பெரிய ரிஸ்க் எடுத்தோமே.. பாஜக, தேமுதிக போன்ற கட்சிகள் ராஜ்யசபா சீட் கேட்ட போது கூட கொடுக்காமல் பாமகவுக்கு முன்னுரிமை கொடுத்தோமே.. ஆனால் இப்படி ஆகிவிட்டதே என்று அதிமுக தரப்பு கொதித்து போய் உள்ளது. தேமுதிக அதிமுக கூட்டணி முறிய கூட பாமகவிற்கு கொடுக்கப்பட்ட இந்த முக்கியத்துவமே காரணம். பாமகவிற்காக தேமுதிகவை இழக்க அதிமுக ரெடியாக இருந்தது. ஆனால் அதே பாமக தற்போது அதிமுகவை இழக்க தயாராகிவிட்டது. பாமகவின் இந்த முடிவு அதிமுகவின் உயர் மட்ட தலைவர்கள் எதிர்பார்த்தது என்றாலும் அதற்கு பின்பான அறிக்கையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

பாமக அறிக்கை
அதிமுகவில் வலுவான தலைமை இல்லை. கட்சியில் கட்டுப்பாடு இல்லை. கூட்டணி தர்மம் மதிக்கப்படவில்லை. கட்சி நிர்வாகிகளே எடப்பாடி பழனிச்சாமி கட்டப்படுத்தவில்லை என்று பல "இல்லைகளை" வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ராமதாஸ் கடுமையான விமர்சனம் வைத்துள்ளார். கூட்டணியில் இருந்து அமைதியாக பாமக வெளியேறும் என்று நினைத்த அதிமுகவிற்கு இந்த அறிக்கை கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.. அத்தனையும் செய்துவிட்டு இப்போது இப்படி கெட்ட பெயரும் சம்பாதிக்க வேண்டி இருக்கிறதே என்று அதிமுக தரப்பு புலம்ப தொடங்கி உள்ளது. இதனால் விரைவில் அதிமுக தரப்பில் இருந்து வலுவான கண்டங்கள் பாமகவிற்கு எதிராக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications