ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு?
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்த தர்மர் எம்பி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது தர்மர் எம்பி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கும் பதவிகள் ஒதுக்கப்பட்டன.

அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் இருந்த போது அவருடன் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமசந்திரன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர், மனோஜ் பாண்டியன், ஐயப்பன், பெங்களூர் புகழேந்தி உள்ளிட்டோர் இருந்தனர்.
இவர்களில் ஜேசிடி பிரபாகர் தவெகவுக்கு சென்றுவிட்டார், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவுக்கு சென்றுவிட்டனர். பெங்களூர் புகழேந்தி இவர்களின் சங்காத்தமே வேண்டாம் என கூறி தனியாக செயல்பட்டு தற்போது புரட்சி அதிமுக என்ற அமைப்பை தொடங்கியுள்ளார்.
அது போல் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இருந்த பண்ருட்டி ராமசந்திரனும் புதிய கட்சியை தொடங்கிவிட்டார். ஓபிஎஸ்ஸுடன் இருந்த குன்னம் ராமசந்திரன் அரசியலில் இருந்தே விலகினார். அது போல் தர்மரும் அதிமுகவில் இணைந்துவிட்டார்.
அதிமுகவில் இரட்டை தலைமையின் போது அதிமுகவின் முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளரும், முதுகுளத்தூர் ஒன்றியக்குழு தலைவராக இருந்த தர்மரை, ராஜ்யசபா எம்பியாக்க எடப்பாடி பழனிசாமியுடன் மல்லுக்கட்டினார் ஓபிஎஸ். அப்படிப்பட்ட சூழலில் பதவியை வாங்கிக் கொண்டு அதிமுகவில் இணைந்துவிட்டார்.
எல்லாரும் போன பிறகு ஓபிஎஸ்ஸுடன் ஐயப்பன் மட்டும் இருந்தார். ஓபிஎஸ் யாருடன் கூட்டணிக்கு செல்வார் என்பது தெரியாமல் வெல்லமண்டி நடராஜன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி காத்திருந்தனர்.
அப்போது திடீரென சட்டசபை கூட்டத்தொடரில் ஐயப்பன், முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசினார். ஓபிஎஸ்ஸும் அடுத்த முதல்வர் ஸ்டாலின் என செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். இதனால் இவர்களின் சிக்னலை அறிந்த வெல்லமண்டி நடராஜன் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அமைப்புச் செயலாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளார்.
இதையடுத்து கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியும், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் தர்மர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள் என்ற பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாக இருந்த காளியம்மாள் தற்போது ஓராண்டு ஓய்வுக்கு பிறகு அதிமுகவில் இணைந்துள்ளார். எனவே அவருக்கு என்ன மாதிரியான பதவி கிடைக்கும் என தெரியவில்லை. காளியம்மாள் நல்ல பேச்சாளர், எல்லாவற்றையும் பாயிண்ட் பாயிண்ட்டாக பேசுவார். இவரது பிரச்சாரங்கள் நாம் தமிழர் கட்சிக்கு அப்போது வலுவை சேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications