அதிமுக - பாஜக கூட்டணி.. இதுதான் எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம்.. சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி!
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி ராஜதந்திரத்தோடு அமைத்திருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு சட்டசபை நாயகனாக எடப்பாடி பழனிசாமி இருக்கப் போகிறார் என்று கூறிய ராஜேந்திர பாலாஜி, இந்த கூட்டணியால் திமுக பதறி போய் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர். அதுமட்டுமல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சியே நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சரணடைந்த அதிமுக
அதிமுக வரலாற்றில் தேர்தலுக்கு முன்பாகவே கூட்டணி ஆட்சி என்று சொல்வது இதுவே முதல்முறையாகும். அதிமுக இந்த அளவிற்கு இறங்கி சென்று பாஜகவுடன் கூட்டணி அமைத்தது பல்வேறு தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அதிமுக எந்த நிபந்தனையும் இல்லாமல் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டதாக அமித் ஷா தெரிவித்தார்.
ராஜேந்திர பாலாஜி ஆதரவு
நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, வக்ஃபு வாரிய திருத்த சட்டம் உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் இருந்து வரும் சூழலில், அதிமுக எந்த நிபந்தனையும் இல்லாமல் பாஜகவிடம் சரணடைந்துவிட்டதாக திமுக தரப்பில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக முதல் நபராக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.
எடப்பாடியின் ராஜதந்திரம்
கடந்த முறையே மோடி எங்களின் டாடி என்று கூறியவர் ராஜேந்திர பாலாஜி. இதனால் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராஜதந்திரத்தோடு கூட்டணி அமைத்திருக்கிறார். அதிமுக என்ன செய்யும், எடப்பாடி பழனிசாமியால் என்ன செய்துவிட முடியும்? என்று கேட்கப்பட்டு வந்த நிலையில், அற்புதமான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
சட்டசபை ஹீரோ
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை கூட்டணி மூலமாக எடப்பாடி பழனிசாமி காட்டி இருக்கிறார். பங்குனி உத்திரத்தன்று எடுக்கும் முடிவுகள் வெற்றியில் முடியும். அந்த அடிப்படையில் 2026ல் அதிமுக அடையப் போகும் வெற்றி என் கண்முன் தெரிகிறது. அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபையின் ஹீரோவாக எடப்பாடி பழனிசாமி இருக்க போகிறார்.
பீதியில் திமுக
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்த திமுகவினர் பதறிபோய் இருக்கிறார்கள். அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததால், அதிமுகவினர் ஆனந்தத்தில் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அமைதி காப்பது அக்கட்சியினர் இடையே விவாதமாகி வருகிறது.












Click it and Unblock the Notifications