நட்சத்திர ஹோட்டலில்.. மணிக்கணக்கில் அமித் ஷா நடத்திய ஆலோசனை! என்ன நடந்தது! வெளியான தகவல்
சென்னை: இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா இப்போது தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். இதற்கிடையே இன்று அவர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தீவிர ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்ட ஆலோசனை என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், கூட்டணி தொடர்பாக இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

பாஜக தலைவர் பதவி
அதேபோல பாஜக மாநில தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது குறித்து ஆலோசிக்கவும் அமித் ஷா தமிழகம் வந்திருப்பதாக சொல்லப்பட்டது. முதலில் மாநில தலைவர் விவகாரம் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வாகியுள்ளார்.
அதேநேரம் இந்த பயணத்தில் அமித் ஷா பலரையும் சந்தித்து பேசினார். குறிப்பாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை அவர் சந்தித்து பேசினார். இருவரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார். அதில் கூட்டணி சார்ந்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அமித் ஷா
மேலும், அமித் ஷா இந்த பயணத்தில் தமிழகத்தில் கூட்டணியையும் இறுதி செய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இதன் காரணமாகவே நட்சத்திர ஹோட்டலில் முதலில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது போன்ற செட் அப்பில் பிரஸ் மீட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், சில காரணங்களால் என்டிஏ கூட்டணி என்ற பேனர் நீக்கப்பட்ட பாஜக என்ற பேனர் மட்டும் இருக்கும்படி மாற்றப்பட்டது.
முன்னதாக அமித் ஷாவை பல்வேறு தலைவர்களும் சந்தித்து பேசியிருந்தனர். அதன்படி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் அமித் ஷாவை சந்தித்திருந்தார். இதற்கிடையே இந்தச் சந்திப்பு குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சில முக்கிய கருத்துகளை தெரிவித்திருந்தார்.

ஆலோசிக்கப்பட்டது என்ன
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், "உள்துறை அமைச்சரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். அதேநேரம் தமிழக அரசியல் சூழல் குறித்தும் 2026 சட்டசபை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் பேசினேன். இன்றைய அரசியல் களநிலவரம் குறித்தும் பேசினேன். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரி இல்லை. சட்ட ஒழுங்கு திமுக அரசால் கையாள முடியவில்லை. மக்களை திசைதிருப்ப பல்வேறு தேவையற்ற விஷயங்களை கூறி வருகிறார்கள். மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை அமித் ஷாவிடம் குறிப்பிட்டேன்.
ஜி.கே.வாசன்
தமிழகத்தில் உள்ள ஒரு அமைச்சர் சமீபத்தில் அநாகரீகமான மற்றும் அருவருப்பான கருத்துகளை கூறியிருந்தார். இதுதான் அவர்கள் சொல்லும் மாடலா! சற்றும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட நபரை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பெண்களும் அதையே தான் வலியுறுத்துகிறார்கள்.
நான் கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் அமித் ஷாவை சந்தித்தேன். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் சூழலில், தற்போது களநிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பேசினேன்" என்றார்












Click it and Unblock the Notifications