அதிமுக மா.செ.க்கள் கூட்ட தீர்மானத்தை முனுசாமி வாசிக்கும் முன்பே.. தொண்டர்கள் செய்த பகீர் செயல்
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி அறிவிக்கும் முன்பே பட்டாசு வெடித்து அதிமுக நிர்வாகிகள் கொண்டாடினர்.
தமிழக பாஜக- அதிமுக இடையே அவ்வப்போது கூட்டணியில் பிரச்சினையும் மோதல் போக்கும் நிலவி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அண்ணாமலை ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்து தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றுள்ளார் முன்னாள் முதல்வர் என ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார்.

இது பெரும் சர்ச்சையைும் அதிமுக மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து பாஜக- அதிமுக நிர்வாகிகள் ஆளாளுக்கு ஒன்று பேச இந்த விவகாரம் சற்று தணிந்தது. இந்த நிலையில் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில் அண்ணாமலை முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டார் என ஒரு தகவலை கூறி கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டார்.
அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 18 ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் அதிமுக- பாஜக இடையே கூட்டணி இல்லை. ஜெயலலிதா, அண்ணா என்று எங்களின் முன்னோடிகளை அண்ணாமலை அவதூறாக பேசி வருவதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்.
இது கட்சியின் முடிவு தான். அதையே நான் அறிவித்தேன் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து அடுத்த நாளே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில் அதிமுக- பாஜக கூட்டணியில் பிரச்சினையே இல்லை என கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். கூட்டணி இல்லை என்பது கட்சியின் கருத்தாக ஜெயக்குமார் கூறியிருந்த நிலையில் செல்லூர் ராஜூ இப்படி ஒரு கருத்து கூறுகிறாரே என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து அண்ணாமலை கூறுகையில் அதிமுக- பாஜக இடையே கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை எல்லாம் இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு பேச வேண்டும் என்றும் கூட்டணி முறிந்தால் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை பாயலாம் என்றும் கூட்டணி வேண்டாம் என்பவர்களுக்கு பாதுகாப்பு தேவையில்லையா என மறைமுகமாக அண்ணாமலை மிரட்டியிருந்தார்.
இந்த நிலையில்தான் கடந்த இரு தினங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை மட்டுமே சந்தித்துவிட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் அதிமுக பாஜக இடையே கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: கடந்த 18-ஆம் தேதி அதிமுக - பாஜக இடையே கூட்டணி இல்லை என கூறியிருந்தேன். அந்த கருத்தில் எந்த மாற்றமில்லை. ரெய்டு என்ற பூச்சாண்டிகளுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். தமிழில் எங்களுக்கு பிடிக்காத வார்த்தை பூச்சாண்டி என ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மாலை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் கூடியது. இந்த கூட்டத்தில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி முறியும் என கணிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு வந்த பல்வேறு நிர்வாகிகளும் பாஜகவுக்கு எதிராகவே பேசி வந்தனர். இந்த நிலையில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தீர்மானங்கள் குறித்து தெரியப்படுத்த கே.பி. முனுசாமி, வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் கூடினர்.
அப்போது முனுசாமி தீர்மானங்களை அறிவிப்பதற்கு முன்பே எம்ஜிஆர் மாளிகையில் திரண்டிருந்த நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications