அதிமுக: எடப்பாடி பழனிசாமி கோஷ்டி தூக்கத்துக்கு ஆப்பு-ஓபிஎஸ் அப்பீல் மனு மீது நாளை ஹைகோர்ட் தீர்ப்பு!
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பு உருவாகி உள்ளது.
அதிமுகவின் பொதுக்குழுவை கடந்த ஆண்டு ஜூலை 11-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கோஷ்டி கூட்டியது. அப்பொதுக்குழுவில் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற சட்ட விதி ரத்து செய்யப்பட்டது; அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்; ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றம் வரை சென்றது.

இந்த் வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லும் என தீர்ப்பளித்தது. அதேநேரத்தில் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் அதிமுகவில் இருந்து தாங்கள் நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது; அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லாது என அறிவிக்க கோ ரியும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், வைத்திலிங்கம் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இம்மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கின் விசாரணை மொத்தம் 7 நாட்கள் நடைபெற்றது. பின்னர் இருதரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன. இதையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஓபிஎஸ் உள்ளிட்டோர் 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நாளை தீர்ப்பளிக்கிறது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 20-ந் தேதி மிகப் பிரம்மாண்டமான மாநாடு மதுரையில் நடத்தப்பட்டது. இந்த மாநாடு பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications