ஜூலை 18-ல் தமிழ்நாடு நாள் ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு- நவ.1-ல்தான் கொண்டாட வலியுறுத்தல்!
சென்னை: ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் 1-ந் தேதிதான் தமிழ்நாடு நாள் கொண்டாட வேண்டும் என்றும் ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ந் தேதியை மாநிலம் உருவாகிய நாளாக ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. இதனடிப்படையில் நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.

தனிக்கொடி கோரிக்கை
இதனை ஏற்று கடந்த அதிமுக அரசு நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்து அரசு விழாவாக கொண்டாடியது. இதனையே தற்போதைய திமுக அரசும் கடைபிடித்து நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடு நாள் என கொண்டாடுவதுடன் தமிழ்நாட்டுக்கான தனிக் கொடியை உருவாக்கி அறிவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

முதல்வரின் திடீர் அறிவிப்பு
ஆனால் திடீரென்று தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ந் தேதியையே தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் வலியுறுத்தினர். இதனடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஜூலை 18 தமிழ்நாடு நாள் என அறிவித்து அரசாணை வெளியிடப்படும் என்றார்.

முதல்வருக்கு எதிர்ப்பு
இதற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். மேலும் தமிழர் இயக்கங்களும் இதனை எதிர்த்துள்ளன. திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் முதல்வர் இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.

அதிமுகவும் எதிர்ப்பு
இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஜூலை 18-ந் தேதி 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு கண்டனத்துக்குரியது. முதலமைச்சரின் அறிவிப்பு பொருத்தமற்ற, மரபு மீறிய, உள்நோக்கம் கொண்ட, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட செயல். மேலும் ஜூலை 18-ம் தேதி 'தமிழ்நாடு நாள்' என்ற அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். நவம்பர் 1-ம் தேதியே தமிழ்நாடு நாளை தொடர்ந்து கொண்டாட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications