ரஜினி அன்னைக்கு சொன்னாரே.. ஞாபகம் இருக்கா?.. அதுதான் இப்போ நடக்குது.. இதெல்லாம் சரிப்பட்டு வராது!
ரஜினி சொன்ன அரசியல் முறை தமிழகத்துக்கு சரிபட்டு வராது
சென்னை: முதல்வர் வேட்பாளர் என்று பிரச்சனை வெடித்து, கடைசியில் அதிமுக கட்சியை யார் கைப்பற்றுவது என்ற விவகாரம் வரை வந்து முடிந்துள்ளது.. இதை ரஜினி அன்று சொன்ன பேட்டியுடன் ஒப்பிட்டும் பார்க்கலாம்!
லீலா பேலஸில் சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பேட்டி தந்தார்.. அப்போது, கட்சி வேறு ஆட்சி வேறு என்ற ஒரு புதுமாதிரியான விஷயத்தை முன்வைத்தார்.
"தேசிய கட்சிகளை தவிர மாநில கட்சிகளில் ஒருவரேதான் ஆட்சி தலைவராகவும் கட்சி தலைவராகவும் இருப்பார்கள்... ஆட்சிக்கு வந்தபிறகு மக்கள் அவர்களிடம் ஒன்றும் கேட்க முடியாது, கட்சியில் இருப்பவர்கள் கேட்டாலும் கட்சியில் இருந்து தூக்கிவிடுவர்... அதனால், கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை தான் நம் கட்சியில் இருக்கும்.. ஆட்சி சுதந்திரமாக செயல்படவேண்டும், கட்சியின் தலையீடு இருக்காது" என்றார்.

சோஷியல் மீடியாவில்
ரஜினி பேசிய இந்து பல விவாதங்களை சோஷியல் மீடியாவில் அப்போது கிளப்பியது.. இது சாத்தியமா என்றும் பரபரப்பாக விவாதித்தனர்.. ரஜினி சொல்வதை பார்த்தால் அது சிறப்பாகத்தான் இருக்கிறது.. ஆனால், அதில் உள்ள நடைமுறை சிக்கலை மேலோட்டமாக பார்த்தாலே அது சாத்தியமில்லை என்பது புரியும்.

ரகசிய காப்பு பிரமாணம்
உதாரணத்துக்கு, பதவியேற்பு முடிந்தவுடன் ரகசிய காப்பு பிரமாணம் என்று ஒன்று உள்ளது.. அரசு சம்பந்தமான ரகசியங்களை வெளிநபருக்கு சொல்ல மாட்டேன் என்பதுதான் அதன் சாராம்சம். ஆட்சியில் இருப்பவர்கள் இந்த பிரமாணத்தை எடுத்து கொள்வது வழக்கம்.

ரஜினிகாந்த்
ஒரு உதாரணத்துக்கு, ரஜினி கைகாட்டும் நபர்தான் முதல்வராக இருப்பார் என்றே வைத்து கொள்வோம்.. அவர் எப்படி முடிவு எடுப்பார்? அவர் எப்படி ரஜினியிடம் ஆலோசிக்க முடியும்? அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படும் விஷயங்களை அவர் ரஜினியிடம் சொல்ல முடியாது.. அப்படி சொல்ல முடியாத பட்சத்தில் ரஜினி எப்படி அதை சரி செய்ய முடியும்? ஒருவேளை அவர் ரஜினியிடம் விவாதித்தால் இது சட்டப்படி தவறும்கூட.. சட்டத்தில் அதற்கு இடமும் இல்லை. அவர் தவறு செய்தாலும் ரஜினியால் எப்படி கண்டிக்க முடியும்?

கிண்டல்
எல்லோருமே ஆட்சியின் பின்னால்தான் போவார்கள், அதிகாரம் எங்கேயோ அங்கேதான் போவார்கள். ஒருவேளை சோனியா காந்தி போல ஆக வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால்.. மன்மோகன் சிங்குக்கு கிடைத்த கெட்ட பெயர்தானே ரஜினி கைகாட்டும் முதல்வருக்கும் கிடைக்கும்.. "பொம்மை முதல்வர்" என்றுதான் கிண்டலடிப்பார்கள். இதுதான் ரஜினி சொன்ன ஆட்சி வேறு, கட்சி வேறு என்ற அடிப்படையின் சிக்கல்.

ஒருங்கிணைப்பாளர்
இதுபோலதான் அதிமுகவிலும் நடந்து வருகிறது.. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற ரீதியில்தான் 4 ஆண்டுகளாக தமிழக அரசியல் நகர்ந்து வருகிறது. துணை முதல்வர் பொறுப்பில் ஓபிஎஸ் இருந்தாலும், அது அவ்வளவாக பவர்புல் பதவி கிடையாது.. தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.. திமுகவில் பொதுச்செயலாளர் பதவி போலவேதான் இதுவும்.

பொதுச்செயலாளர்
அனைத்து அதிகாரங்களையும் பொதுச்செயலாளர்தான் எடுக்க முடியும்.. அந்த வகையில், எடப்பாடியார்தான் தமிழகத்தை ஆண்டு வருகிறார்.. இப்போது தன்னை முதன்மைப்படுத்த ஓபிஎஸ் வேண்டும் என்று நினைக்கிறார்.. ஆனால், அப்போதும் மேற்கூறிய நடைமுறை சிக்கல் எழவே செய்யும்.. அதுமட்டுமல்ல, இதுவரை திராவிடர் கழக அரசியலில் இப்படி இரட்டை தலைமை என்ற பேச்சே எழுந்தது இல்லை.

பேச்சுவார்த்தை
ஒற்றை தலைமையில்தான் கலைஞரும் சரி, எம்ஜிஆரும் சரி லட்சோப லட்ச தொண்டர்களை அரவணைத்து சென்றனர்.. இன்று எந்த மாதிரி முடிவு எடுத்தாலும்சரி, ஒற்றை தலைமை என்ற பேச்சுதான் எப்போதும் நிலைக்கும்.. ஆட்சி, வேறு கட்சி வேறு என்று ரஜினி சொல்வதை முன்னெடுத்தால், கடந்த ஒரு வாரமாக அதிமுகவில் நடந்த சம்பவங்களும், விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தைகளுமே அதற்கு உதாரணமாக நிற்கின்றன!












Click it and Unblock the Notifications