சீட்டுக்கட்டாய் சரிந்த அதிமுக.. கடைசி செங்கல்லையும் உருவிய சண்முகம்! தூது பறந்த மாஜிகள்! நோ யூஸ்!
சென்னை: அதிமுகவில் மீண்டும் பெரும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி சந்தித்த கடும் தோல்விக்குப் பிறகு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர்கள் நேரடியாக குரல் கொடுக்க ஆரம்பித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் தனி அணியாக செயல்பாட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சண்முகம் தரப்பில் 38 எம்.எல்.ஏக்கள் இருக்கும் நிலையில், ஆள் அனுப்பி சமாதானம் பேசியிருக்கிறார் எடப்பாடி. ஆனாலும் எடப்பாடியை ஓரம்கட்டுவதில் உறுதியாய் உள்ளாராம் சிவி சண்முகம்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டது. பல தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதோடு, பல முன்னணி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

இந்த தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளது. இந்த சூழலில், நேற்று காலை எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக பிளவு
அந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எப்படிப் பதிலளிப்பது, சட்டமன்றத்தில் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது எடப்பாடி பழனிசாமியின் சில முடிவுகளுக்கு எதிராக சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, அந்த அணியைச் சேர்ந்த சிலர் கூட்டத்திலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
சிவி சண்முகம்
இதையடுத்து, சி.வி. சண்முகம் தலைமையில் சென்னை எம்.ஆர்.சி நகரில் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 38 எம்.எல்.ஏக்கள் மற்றும் சில மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவி சண்முகம்
சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியையும், துணைத் தலைவராக சி.வி. சண்முகத்தையும் தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 38 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் தயாராகி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் அதிமுகவில் அதிகார மையம் இரண்டாக உடைந்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்களில் சுமார் 60 சதவீதம் பேர் சி.வி. சண்முகம் - வேலுமணி அணிக்கு ஆதரவாக இருப்பதாகவும், 40 சதவீதம் பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமாதான முயற்சி
நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, சமாதான முயற்சியாக சில மூத்த தலைவர்களை தூதுவர்களாக அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சேலம் இளங்கோவன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் சி.வி. சண்முகம் தரப்பினரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. "சி.வி. சண்முகம் சொல்வதை கேட்கத் தயாராக இருக்கிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி சமரச மனப்பான்மையுடன் பேசியதாக கூறப்பட்டாலும், அதிருப்தி அணியினர் அதற்கு உடன்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் விஜய்
இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் அதிமுகவில் தீவிரமாக விவாதம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை சி.வி. சண்முகம் - வேலுமணி அணியினர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தால், அவர்களை கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
எடப்பாடிக்கு நெருக்கடி
அதேநேரத்தில், "தொடர் தோல்விக்கு பொறுப்பு ஏற்க வேண்டியது தலைமைதான்" என்ற மனநிலை பல நிர்வாகிகளிடம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி அமைப்பு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் செலவினம் உள்ளிட்ட பல விஷயங்களில் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி அதிகரித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதிமுகவின் எதிர்காலம்
இதனால் அதிமுகவின் எதிர்காலம் குறித்து கட்சித் தொண்டர்களிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் பிரிவு காரணமாக பலவீனமடைந்த கட்சி, தற்போது மீண்டும் உடையும் நிலைக்கு சென்றிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், அதிமுகவின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications