"இது வேலைக்கு ஆகாது!" பிரதமர் மோடியை நேரில் சந்திக்க திட்டமிடும் ஓபிஎஸ்! ஆனால் அதிலும் ஒரு சிக்கல்?
சென்னை: அதிமுகவில் உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் அடுத்தகட்ட நகர்வு குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஓரிரு மாதமாகவே அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் தான் தமிழக அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறி இருந்தது.
கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழுவிலேயே இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவால் கொண்டு வரப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி
இந்தச் சூழலில் கடந்த வாரம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அடுத்த பொதுச்செயலாளரைத் தேர்வு செய்ய 4 மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என்றும் இதற்குப் பொறுப்பாளர்களாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டார்.

அறிவிப்பு
மேலும், அன்றைத் தினமே ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கச் சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதிமுக தொண்டர்கள் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் கட்சியிலிருந்து அன்றே நீக்கப்பட்டனர்.

நீக்கம்
இந்நிலையில், நேற்று மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள், ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட 18 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இவ்வளவு விரைவாக இப்படியொரு அறிவிப்பு வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

பதிலடி
இதனிடையே இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சீல் வைக்கப்பட்டு உள்ள நிலையில், இவர்களின் இதுபோன்ற அறிவிப்புகள் பிரச்சினையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி உள்ளது.

தேர்தல் கமிஷன்
அதேபோல தேர்தல் ஆணையத்திற்கும் இரு தரப்பும் முறையிட்டுள்ளனர். உட்கட்சி தேர்தல் வழியாக ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளதால் கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பு தேர்தல் கமிஷனில் கூறுகிறது. அதேநேரம் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலர் தேர்வு, ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது போன்ற விபரங்களை வழங்கி உள்ளது எடப்பாடி தரப்பு! இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணிக் கட்சிகள்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து கூட்டணிக் கட்சிகளும் வாழ்த்து தெரிவித்து உள்ளது. இருப்பினும், இரு தரப்பும் இரட்டை இலைக்கு உரிமை கோரிய தேர்தல் கமிஷனுக்கு சென்று உள்ளதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதனால் தேர்தல் கமிஷனின் முடிவை எதிர்நோக்கியே இரு தரப்பும் காத்து இருக்கிறது.

பிரதமரைச் சந்திக்கத் திட்டம்
இந்தச் சூழலில் சென்னையில் வரும் 28ஆம் தேதி நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்கப் பிரதமர் மோடி சென்னை வர உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக அவரிடம் நேரம் வாங்கவும் முயன்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த முறை டெல்லி சென்ற போதே, ஓபிஎஸால் பிரதமர் மோடியைச் சந்திக்க முடியாத நிலையில், இந்த முறை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்பதில் ஓபிஎஸ் உறுதியாக உள்ளார்.
Recommended Video

நேரம் கிடைக்குமா
பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தால் அதிமுக விவகாரம் குறித்து ஓபிஎஸ் தரப்பில் பேசப்படும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்த போது, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாலேயே துணை முதல்வர் பதவியை ஏற்றதாக ஓபிஎஸ் கூறி இருந்தார். இது தமிழக அரசியலில் சலசலப்பை உண்டாக்கி இருந்ததால், இந்த முறை ஓபிஎஸை பிரதமர் சந்திப்பார் என உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications