கழகத்தில் கலகம்..எடப்பாடிக்கு எதிராக வெடித்து கிளம்பிய சீனியர் செங்கோட்டையன்! பின்னணியில் பெரும் படை
சென்னை: எப்போதுமே அமைதி அரசியல்வாதியாக அறியப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வெடித்துக் கிளம்பியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதன் வெளிப்பாடே இந்த பேச்சு எனவும், அவருக்கு பின்னால் நிலோபர் கபில், பெஞ்சமின், மணிகண்டன் உள்ளிட்ட புறக்கணிக்கப்பட்ட பல முன்னாள் அமைச்சர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த அதிமுகவில் மீண்டும் புயல் வீச தொடங்கியுள்ளது எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட விழாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் இடம் பெறவில்லை என அந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் கட்சியின் மிக மூத்த சீனியருமான செங்கோட்டையன்.

அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தும் அதில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர் விழா குழுவினரிடம் மேடையில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை வைக்க வேண்டும் என கூறியும் அவர்கள் படங்கள் இல்லை எனவும், அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காக நிதி உதவி வழங்கியதோடு, அதற்கு அடித்தளமாக இருந்த ஜெயலலிதாவின் படம் வைக்கப்படவில்லை. அதனால் கலந்து கொள்ளவில்லை என விளக்கமும் அளித்திருந்தார்.
இந்த நிலையில் செங்கோட்டையனின் பேச்சு புகைப்படங்கள் வைக்கப்படவில்லை என்பதற்கான அல்ல, எடப்பாடி பழனிச்சாமி மீதான கோபத்தின் வெளிப்பாடு தான் அது என்கின்றனர் அதிமுகவினர். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முகமாக தற்போது முன்னிறுத்தப்படுகிறார். அதிமுக மேடைகள், நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதி மாவட்ட செயலாளர்களுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்ற பேச்சு ஏற்கனவே இருக்கிறது.
அதிமுகவில் இருந்து இதே பிரச்சனை காரணமாகத் தான் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்ட சில மாவட்ட செயலாளர்களோடு வெளியேறினார். இந்த நிலையில் பல மூத்த முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ளனர். அதன் வெளிப்பாடுதான் செங்கோட்டையனின் பேச்சு. அதிமுகவில் ஜெயலலிதா இருந்தபோது பல சீனியர்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். குறிப்பாக வீரமணி, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலோபர் கபில், ஓரங்கட்டப்பட்ட பெஞ்சமின், அதிருப்தியில் இருக்கும் கேபி அன்பழகன், மணிகண்டன் என பலர் ஜெ., ஆட்சிக் காலத்தில் முக்கிய பொறுப்புகளை கட்சியிலும் ஆட்சியிலும் வகித்து வந்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி தலையெடுத்த பிறகு அவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட ஓரம் கட்டப்பட்டு விட்டனர். மேலும் கோகுல இந்திரா, வளர்மதி உள்ளிட்ட சிலரும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அவர்களுக்குள்ளாகவே ஒரு அணியை உருவாக்கி அந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலேயே செங்கோட்டையன் பேசி இருப்பதாக கூறுகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமியை பொறுத்தவரை குறிப்பிட்ட சிலரை தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறார். விஜயபாஸ்கர், ஜெயக்குமார் உள்ளிட்ட வெகு சிலரே அந்த பட்டியலில் உள்ளனர். மேலும் கட்சி இணைய வேண்டும், சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியவர்களையும் ஓரம் கட்டவும் அவர்களுக்கான முக்கியத்துவத்தை குறைக்கவும் எடப்பாடி பழனிச்சாமி ரகசிய உத்தரவு பிறப்பிப்பதாகவும், அந்த பட்டியலில் செங்கோட்டையன் இருந்த நிலையில் அதன் காரணமாகவே கலக குரலை எழுப்பி உள்ளார் என்கின்றனர்.
எம்ஜிஆர் காலத்தில் இருந்து அரசியல் செய்பவர், மிகவும் அமைதியான குணம் கொண்டவர், எடுத்தோம் கவிழ்த்தோம் என பேசாதவர் என அமைதியான அரசியல்வாதியான செங்கோட்டையனே கலக குரல் எழுப்பி இருக்கும் நிலையில் அது சாதாரணமானது அல்ல, அதிமுக எனும் கடலில் வீசப்போகும் புயலுக்கான அறிகுறி என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications