"அப்படி ஒரு நிலைமையை அதிமுகவுக்கு தரமாட்டார்கள்".. தவெக பேரை சொன்னதுமே ராஜேந்திர பாலாஜி ரியாக்ஷன்
சென்னை: தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமையும் சூழல் ஏற்பட்டால் தவெக உடன் கூட்டணி அமைத்து அதிமுக ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "அப்படி ஒரு நிலைமையை அதிமுகவுக்கு தமிழ்நாடு மக்கள் தர மாட்டார்கள். அதிமுகவுக்கு பெரும்பான்மை வாக்குகள் அளிப்பார்கள். எடப்பாடியார் பெரும்பான்மை பலத்தோடு முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் நாளை (மே 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சிவகாசி சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, தற்போது வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஆளுங்கட்சியினரால் திணிக்கப்பட்டவை என்று குற்றம்சாட்டினார்.
இந்த கணிப்புகளைப் பொய்யாக்கி, அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தவெக இளைஞர்கள் மத்தியில் ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அது தேர்தலில் வெற்றி பெறுவதற்கு போதாது என்றும், அதிமுகவே முதலிடத்தை பிடிக்கும். திமுக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
திமுகவுக்கு சாதகமான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டவை எல்லாம் அவர்களின் பினாமி சேனல்கள். கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது, கிட்டத்தட்ட அனைத்து கணிப்புகளும் திமுக வெற்றி பெறும் என்றே கூறின. ஆனால் ஜெயலலிதா தலைமையில் அதிமுக 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததை ராஜேந்திர பாலாஜி சுட்டிக்காட்டினார்.
வடநாட்டிலிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ எடுக்கப்படும் இத்தகைய கணிப்புகள் வாக்காளர்களின் உண்மையான மனநிலையை பிரதிபலிக்காது என்றும், கருத்துக்கணிப்புகளை ஊடகங்களின் தீனி என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, அது மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்காது என்றும் அதிமுகவின் வெற்றி உறுதியானது என்றும் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தொங்கு சட்டசபை அமையும் சூழல் ஏற்பட்டால் தவெக உடன் கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி, "அப்படி ஒரு நிலைமையை அதிமுகவுக்கு தமிழ்நாடு மக்கள் தர மாட்டார்கள். அதிமுகவுக்கு பெரும்பான்மை வாக்குகள் அளிப்பார்கள். எடப்பாடியார் பெரும்பான்மை பலத்தோடு முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications