ஒரு கூட்டு கிளியாக..ஒன்று கூடும் அதிமுக ’மாஜி’ தலைகள்? அதளகமாகும் அதிமுக..எடப்பாடியின் திடீர் முடிவு
சென்னை: அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அந்த கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படும் நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் கூட்டப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி இது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது
18வது மக்களவைக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவடைந்திருக்கிறது. தேசிய அளவில் ஐந்து கட்ட வாக்கு பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில் இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.

ஜூன் ஒன்றாம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது இதையொட்டி பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் களம்: தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் நிறைவடைந்து இருந்தாலும் வாக்கு எண்ணிக்கை வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. இதில் காரணமாக அரசியல் நிகழ்ச்சிகளோ அல்லது பெரிய அளவிலான கட்சி நிகழ்ச்சிகளோ எதுவுமே இல்லை. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின் வழக்கமான அரசியல் களத்தை மக்கள் பார்க்க முடியும். அதே நேரத்தில் இந்த இடைப்பட்ட காலத்தில் கட்சியை சீரமைக்கும் முயற்சிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் கட்சிகள் தீவிரம்: அந்த வகையில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் நிர்வாகிகள் மாற்றம் விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் நிர்வாகிகளின் செயல்பாடுகள் அடிப்படையில் இந்த மாற்றம் இருக்கும் எனவும், தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்கள், ஓரளவு செயலாற்றியவர்கள், வேலை செய்யாமல் இருந்தவர்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பதவி உயர்வு அல்லது நிர்வாகிகள் நீக்குமோ நடைபெறும் என கூறப்படுகிறது.
அதிமுகவில் அதிருப்தி: திமுகவை பொருத்தவரை தேர்தலுக்குப் பிந்தைய மாற்றங்கள் பெரிய அளவில் இருக்காது என கூறப்படுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் -பாஜக மாவட்ட தலைவர்கள் முதல் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் வரை பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். அதிமுகவை பொருத்தவரை தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் சுணக்கம் காட்டியதாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்கனவே ரிப்போர்ட் பறந்து இருக்கிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் வேலை சிறப்பாக இல்லை.
எடப்பாடி பழனிசாமி: இதனால் ஜெயிக்க வாய்ப்பு இருந்த தொகுதிகள் கூட கைவிட்டு போனது.. தென்மாவட்டங்களில் போட்டியிடக் கூட வேட்பாளர்கள் வரவில்லை.. கடந்த தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டியவர்கள் இந்த தேர்தலில் ஒதுங்கிக் கொண்டது எடப்பாடி பழனிச்சாமியை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்த அதிருப்தியை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.
மற்றொரு பூகம்பம்: இதற்கிடையே அதிமுகவில் மற்றொரு பூகம்பம் முளைத்திருக்கிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்ற பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஒருவேளை மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பாதகமாக இருந்தால் அளவிலான பிரச்சனைகள் எழும் எனவும் சசிகலா டிடிவி தினகரன் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீண்டும் கட்சிக்குள் வரலாம் என யூகங்கள் கிளம்பி இருக்கிறது.
தொண்டர்கள் குழப்பம்: எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் ஆர்பி உதயகுமார், எஸ்பி வேலுமணி போன்ற முன்னாள் அமைச்சர்களும் அதனை மறுத்து வருகின்றனர். மேலும் தலைமைக்கு எதிராக சில அமைச்சர் முன்னாள் அமைச்சர்கள் செயல்படுவதாகவும் கூறப்பட்ட நிலையில் அது தொடர்பாக அதிமுகவில் பலத்த சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது அதிமுக தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: இந்நிலையில் நிர்வாகிகள் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட குழப்பத்தை போக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுவார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சென்னையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் செயல்பாடு, வாக்கு எண்ணிக்கைக்கு பிறகாக அதிமுகவின் நிலைப்பாடு ஓபிஎஸ் வருகை குறித்த விவகாரங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை போல தற்போது நடக்கும் கூட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய கருத்துகளை கூறுவார் என எதிர்நோக்கி இருக்கின்றனர் அரசியல் கட்சியினரும் அரசியல் நிபுணர்களும்..












Click it and Unblock the Notifications