விஜயின் தவெக பற்றி.. எடப்பாடி சுடசுட எடுத்த சர்வே.. மக்கள் சப்போர்ட் எவ்வளவு? கசிந்த கணிப்பு?
சென்னை: விஜய்க்கான செல்வாக்கு எப்படி இருக்கிறது ?அவரை மக்கள் ஏற்கிறார்களா? என்கிற இரட்டைக் கேள்விகளுக்கு பதில் தேடி அதிமுக சார்பாக பெரிய சர்வே ஒன்று நடத்தப்பட்டு உள்ளதாம்.
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பிரதான கட்சிகள் அனைத்தும், கள நிலவரங்கள் எப்படி இருக்கிறது? மக்களின் மன நிலை என்ன? என்பதை அறிய தனியார் ஏஜென்சிகள் மூலம் ரகசிய சர்வே எடுத்து பார்க்கின்றனர்.

இந்த சர்வே எடுப்பதன் நோக்கம், தங்கள் கட்சிக்கு மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது? என்பதை அறிவது ஒரு புறம் இருந்தாலும், எதிர்க் கட்சிக்கு எந்தளவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது தான் பிரதான கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது. இதற்கு காரணம், எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கும் இடங்களில் அதனை பலகீனமாக்கவும், தங்கள் கட்சி மார்ஜினில் வெற்றிவாய்ப்பை இழக்கும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவும் தான்.
சபரீசனின் பென் நிறுவனம்
அந்த வகையில், திமுகவிற்காக, ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் பென் நிறுவனம் இயங்கி வருகிறது. அதேபோல, நடிகர் விஜய்யின் த.வெ.க.விற்காக அக்கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமென் அமைப்பு கவனித்து வருகிறது. அதிமுகவை பொறுத்த வரை அக்கட்சியின் முடிவின்படி ஒரு தனியார் நிறுவனம் இந்த வேலையை பார்த்து வருகிறது. அதே சமயம் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன், தனியாக ஒரு தனியார் ஏஜென்சி மூலம் தமிழக தேர்தல் களத்தின் பல்ஸை அறிந்துகொள்கிறார்.
அந்த ஏஜென்சி மூலம் 3 மாதங்களுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் சர்வே எடுத்துப் பார்க்கிறார் மிதுன். தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கும் முதல்நாள் வரை மக்களின் மனநிலை மாறக்கூடியது. அதனால், கடைசி கட்டம் வரைக்கும் மக்களின் மனநிலையை அறிந்துகொள்வது முக்கியம் என்பதாலேயே இந்த 3 மாதங்களுக்கு ஒருமுறை என்கிற கான்செப்டுக்குள் நுழைத்துள்ளார் அவர்.
சர்வே ரிசல்ட்
இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு ரிசல்ட் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சர்வே என்பது அதிமுகவிற்கான வெற்றி வாய்ப்புப் பற்றி எடுக்கப்படவில்லையாம். மாறாக, விஜய்க்கான செல்வாக்கு எப்படி இருக்கிறது ?அவரை மக்கள் ஏற்கிறார்களா? என்கிற இரட்டைக் கேள்விகளுக்கு பதில் தேடி மட்டுமே இந்த சர்வே எடுக்கப்பட்டதாம். அந்த சர்வேயின் முடிவிகளில், சீமானின் நாம் தமிழர் கட்சியைப்போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
8-10 சதவிகித வாக்குகள்
இதற்காக 8 முதல் 10 சதவீத வாக்குகள் மட்டுமே அவருக்கு கிடைக்கிறது. அதேசமயம், ஒரு இடத்தில் கூட வெற்றிக்கான வாய்ப்பு அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. வட தமிழகத்தில் விஜய் போட்டியிட்டால் அவர் மட்டும் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது. அதுவும் விஜய்யை எதிர்த்து திமுகவும் அதிமுகவும் நேரடியாக வலிமையான வேட்பாளர்களை நிறுத்தினால் விஜய்யின் வெற்றிக் கேள்விக்குறியாகும். மாறாக, விஜய்யை எதித்து திமுகவிலும் அதிமுகவிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டால் விஜய் ஜெயிப்பார்.
வட தமிழகம்
வட தமிழகத்தைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் போட்டியிட்டால் அவரது வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை. சுருக்கமாக, விஜய்யை எதிர்த்து திமுக-அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கினால் விஜய் தோற்பார்; அதே சமயம் அவரை எதிர்த்து பிரதான கட்சிகளின் தோழமைக் கட்சிகள் போட்டியிட்டால் விஜய் ஜெயிப்பார். ஆக, த.வெ.க. தனித்துப் போட்டியிட்டால் விஜய்க்கு மட்டுமே வெற்றி வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி தாக்கத்தை ஏற்படுத்தலாமே தவிர வெற்றி வாய்ப்பு என்பது மிகமிக குறைவு என்பதாகவே இருக்கிறது என்று அந்த சர்வே ரிசல்ட் சொல்கிறதாம். இந்த முடிவுகளை எடப்பாடி பழனிச்சாமியிடம் மிதுன் காட்டியுள்ளார் என்கின்றனர் மிதுனின் நட்பு வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications