பேனா சிலை, 100 ரூபாய் நாணயமும் தான் முக்கியமா? ’கள்ளர் பிரச்சினை’.. உண்ணாவிரதத்தை அறிவித்த எடப்பாடி
சென்னை: கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை முடக்க முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்தும்; பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்கும் முயற்சியினைக் கைவிட வலியுறுத்தியும், அதிமுக மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய வருவாய் மாவட்டங்களின் சார்பில், மதுரையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் வரும் சனிக்கிழமை நடைபெறும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ஆங்கிலேயர் காலம் முதல் கொடுஞ்சட்டங்களால் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமுதாயமான பிரமலைக் கள்ளர் சமுதாய மக்கள், கல்வி ஒன்றே தங்களது வருங்கால சந்ததியினரின் வளர்ச்சி என்பதை உணர்ந்தனர்.

இதற்காக எளிய பொருளாதார நிலையிலும் தங்களுக்குத் தாங்களே 'கள்ளர் காமன் பண்ட்' மூலமாகவும், தங்கள் நிலங்களையும், கடும் உழைப்பையும் கொடுத்து அமைத்துக் கொண்டது தான் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகள்
இந்நிலையில் அதன் நிர்வாகத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையிடமிருந்து பறித்து, உள்நோக்கத்தோடு பள்ளிக் கல்வித் துறைக்கு மாற்ற முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்து, கடந்த 17.8.2024 அன்று நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அந்த அறிக்கையில், அரசின் இந்த நடவடிக்கையினால், இதுவரையில் அச்சமூக மக்களுக்குக் கிடைத்து வந்த கல்வி கற்கக்கூடிய தளங்கள், வேலை வாய்ப்பு, நெடிய வரலாற்று அடையாளங்கள் அழிவதற்கான வாய்ப்புகள் போன்ற, பல அடிப்படை உரிமைகள் பறிபோகும் என்பதால், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாகத்தை மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளை விடியா திமுக அரசு உடனடியாகக் கைவிடாவிடில் பாதிப்புக்குள்ளாகிய கள்ளர் சமுதாய மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நடத்தும் என்று எச்சரித்திருந்தேன்.
பேனா சிலை வைப்பதிலும், 100 ரூபாய் நாணயம் வெளியிடுவதிலும், அதனை விளம்பரப்படுத்துவதிலும் மட்டுமே ஈடுபாடாக உள்ள இந்த விடியா திமுக அரசு, மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாக வரலாறு இல்லை. அதேபோல், தற்போதும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் நிர்வாக முறையை மாற்றத் துடிக்கும், தன்னுடைய மக்கள் விரோதப் போக்கில் இருந்து விடியா திமுக அரசு மாறுவதாகத் தெரியவில்லை.
எனவே, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை உள்நோக்கத்தோடு முடக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்தும்; பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்கும் முயற்சியினைக் கைவிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய வருவாய் மாவட்டங்களின் சார்பில், 24.8.2024 - சனிக் கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, மதுரை மாவட்டம், செக்கானூரணி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம், கழகப் பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. திண்டுக்கல் C. சீனிவாசன் தலைமையிலும், ஆர்பி உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோ முன்னிலையிலும் நடைபெறும்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை, மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய வருவாய் மாவட்டங்களில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் ஒன்றான கள்ளர் சமுதாயத்தின் வரலாற்று அடிப்படை கொண்ட கல்வி அமைப்பு முறையை பறிக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தோழமைக் கட்சியினர், அனைத்து சமூக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications