கடைசி நம்பிக்கை.. எடப்பாடிக்கு எதிராக ஓ பன்னீர்செல்வத்தின் இறுதி அஸ்திரம்.. நாளை மிக முக்கியமான நாள்
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், தங்கள் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11 ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் பொதுச்செயலாளர் தேர்தலும் அறிவிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஜூலை 11 ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும் பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ்பாபு கடந்த மார்ச் 28-ந் தேதி உத்தரவிட்டார்.
அவரது தீர்ப்பில், பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதால், 2,460 பொதுக்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக்கூடியவையே என தெளிவுபடுத்தினார். அந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருநீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது. அவ்வாறு தடை விதித்தால், அது தீர்மானங்களை செல்லாது என அறிவிக்க கோரிய பிரதான வழக்கில் நிவாரணம் வழங்கியதாகிவிடும் .. எனவே அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என ஆகஸ்டு 25-ந் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் வக்கீல் கவுதம் சிவசங்கர் அக்டோபர் 5-ந் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை (நாளை) விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் பட்சத்தில், தனது தரப்பு கருத்தையும் கேட்காமல் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் வினோத் கன்னா உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications