அதிமுக, இரட்டை இலை- ஈபிஎஸ் கோஷ்டியின் ஒற்றை நம்பிக்கையே அந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான்!
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் தங்களுக்கே பெரும்பான்மை இருப்பதால் ஓபிஎஸ் உள்ளிட்டோரை அவமானப்படுத்தி வெளியேற்றியது ஈபிஎஸ் கோஷ்டி. தற்போதைய நிலையில் உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் அடிப்படையில் தங்களுக்குதான் சட்ட சூழ்நிலை சாதகமாக இருக்கிறது என மலைபோல் நம்புகிறதாம் ஈபிஎஸ் கோஷ்டி.
இந்தியாவில் அரசியல் கட்சிகளில் கோஷ்டி பூசல் எழும்போதெல்லாம் உச்சரிக்கப்படுவது சாதிக் அலி வழக்கு தீர்ப்பு. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மேற்கோள்காட்டிதான் இன்றைக்கும் பல தீர்ப்புகள் எழுதப்பட்டு வருகின்றன.

சாதிக் அலி தீர்ப்பு
1969-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்ட காலம். காங்கிரஸ் கட்சியின் காளைமாடு சின்னம் அப்போது ஜெகஜீவன் ராம் கோஷ்டிக்கு கொடுக்கப்பட்டது. இந்திரா கோஷ்டிக்கு பசுவும் கன்றும் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் இந்திரா கோஷ்டி அதிக இடங்களில் வென்றது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சாதிக் அலியால் வழக்கு தொடரப்பட்டது. கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு யாருக்கு அதிகம் என்பதை அடிப்படையாக வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையே இன்றளவும் கட்சி வழக்குகளில் தீர்ப்புக்கான அடிப்படையாக நீதிபதிகள் பின்பற்றுகின்றனர் (Sadiq Ali vs Election Commission of India)
Recommended Video

இரட்டை இலை ரிட்டர்ன்
கடந்த 2017-ம் ஆண்டு அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த நிலையில் இரட்டை இலை சின்னம் மீண்டும் மதுசூதனன், ஓபிஎஸ், செம்மலை உள்ளிட்ட மனுதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போதும் கூட இந்த சாதிக் அலி வழக்கு தீர்ப்புதான் மேற்கோள்காட்டப்பட்டது. அதாவது மனுதாரர்கள் தரப்புக்கு பொதுக்குழுவின் 1877 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது; 34 லோக்சபா எம்.பிக்கள், 8 ராஜ்யசபா எம்.பிக்கள், மொத்தம் 115 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. ஆகையால் இரட்டை இலை சின்னம் மதுசூதனன், ஓபிஎஸ், செம்மலை ஆகிய மனுதாரர்களுக்கு ஒதுக்கப்படுவதாக சாதிக் அலி வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

ஒற்றை நம்பிக்கை
இதேவாதம் அதாவது 5 ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டை இலை ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி கிடைக்க காரணமாக இருந்த வாதம் இன்று ஈபிஎஸ் அணிக்கு அப்படியே பொருந்துகிறது. பொதுக்குழுவில் 2190 பேர் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக நேற்று சிவி சண்முகம் கூறியிருந்தார். அதேபோல் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள், ராஜ்யசபா எம்.பிக்கள் ஈபிஎஸ் அணிக்கே ஆதரவாக இருக்கின்றனர். எத்தனை நீதிமன்றங்களுக்கு ஓபிஎஸ் காவடி தூக்கினாலும் சாதிக் அலி வழக்கு தீர்ப்பு இருக்கும் வரை தங்களை அசைக்கவே முடியாது என்பது ஈபிஎஸ் கோஷ்டியின் ஆகம் பெரும் நம்பிக்கை என்கின்றன எடப்பாடி அணி வட்டாரங்கள்.

அடுத்து என்ன நடக்கும்?
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, கட்சி பஞ்சாயத்துகளில் சாதிக் அலி வழக்கு தீர்ப்பு உள்ளிட்ட பெரும்பான்மையான முடிவுகள் அனைத்தும் பெரும்பான்மை யார் பக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. அதாவது பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ -எம்.பிக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே முடிவுகள் அமையும். இப்போதைய நிலையில் ஈபிஎஸ் பக்கமே காற்று வீசுகிறது; அதேநேரத்தில் தேர்தல் வழக்குகளில் ஓபிஎஸ் தரப்பும் சோடை போன டீம் அல்ல.. ஆகையால் இனிவரும் நாட்களில் சட்டப் போராட்டம் அனல் பறக்கலாம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications