"எதுவும் பண்ணல.. கைவிட்டுட்டாங்க".. 4 சம்பவங்கள்.. விரக்தியின் உச்சத்திற்கே போன அதிமுக மாஜிக்கள்!?
சென்னை: அதிமுகவில் மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என்று பலர் அடுத்தடுத்து விசாரணை வளையத்தில் சிக்கி வருகிறார்கள். மாஜி அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைகளை ஆளும் திமுக அரசு முடுக்கிவிட்டு இருப்பதால் அதிமுகவில் சிலர் கொதிப்பில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு எதிரான பல்வேறு ஊழல் மற்றும் முறைகேட்டு புகார்களை திமுக அரசு விசாரித்து வருகிறது. அதிலும் கடந்த ஒன்றரை மாதத்தில் பல்வேறு அதிமுக தலைகளுக்கு எதிரான புகார்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பழைய வழக்குகளை ஒரு பக்கம் திமுக அரசு தூசி தட்டி விசாரித்து வருகிறது. இன்னொரு பக்கம் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் முந்தைய அரசில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த முறைகேடுகள் குறித்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நடவடிக்கை தொடரும்
திமுக அரசின் இந்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக அதிமுகவில் முக்கியமான புள்ளிகள் சிலர் கொதிப்பில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் ஏற்கனவே கைதாகிவிட்டார். இவர் மீது நடிகை சாந்தினி கொடுத்த புகாரில் தற்போது மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

4 சம்பவங்கள்
இதுபோக முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்தியநாராயணன் மீதான நிதி முறைகேடு புகாரில் முகாந்திரம் உள்ளது என்று கூறி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரபூர்வ விசாரணையை தொடங்கி உள்ளது. இன்னொரு பக்கம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து குவிப்பு வழக்கில் விரைவில் இறுதி தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு ராஜேந்திர பாலாஜிக்கு சாதகமாக வந்தால் கூடுதல் ஆதாரங்களுடன் அரசு மேல்முறையீடு செய்யும் முடிவிலும் உள்ளது.

கொதிப்பு
இதெல்லாம் போக இன்னொரு பக்கம் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சென்னை ஹைகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கணக்கு தணிக்கை அறிக்கையில் முறைகேட்டுக்கான ஆதாரம் இருப்பதால் வேலுமணிக்கு எதிராக கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இப்படி வரிசையாக நான்கு முக்கிய மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு எதிராக திமுக அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.

அதிமுக எதுவும் செய்யவில்லை
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட இந்த 4 நான்கு நடவடிக்கைகள் அதிமுக தரப்பில் பலருக்கு அச்சத்தையும், கொதிப்பையும் ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. திமுகவின் நடவடிக்கை எதிர்பார்த்ததுதான், ஆனால் அதிமுக பெரிதாக சட்ட உதவி எதுவும் செய்யவில்லை. மாஜி அமைச்சர்களே விசாரணை வலையில் சிக்கிவிட்டனர். ஆனால் அதிமுக தலைமை இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று அதிமுக நிர்வாகிகள் புலம்ப தொடங்கி உள்ளனர்.

புலம்பல்
மாஜி மணிகண்டனை கைது செய்த போதே அதை பற்றி அதிமுக தலைமை எதுவும் சொல்லவில்லை. நிர்வாகிகளுக்கு எதிரான வழக்கில் கட்சி எங்களுடன் நிற்காமல் எங்களை கைவிட்டுவிட்டது. அவர்களுக்கு உட்கட்சி பூசலை சரி செய்யவே நேரம் சரியாக இருக்கிறது என்று அதிமுக கட்சி வட்டாரத்தில் இப்போது லேசாக புலம்பல்கள் அதிகரித்து உள்ளதாம்.

கைவிட்டுவிட்டார்கள்
பாஜகவோடு நாங்கள் கூட்டணி வைத்திருந்தோம். இப்போதும் கூட்டணியில் இருக்கிறோம். மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் எங்களுக்கு பெரிதாக அவர்கள் உதவியாக இல்லை என்றும் அதிமுகவின் ஒரு தரப்பு புலம்பி வருகிறதாம். அடுத்தடுத்து அதிமுகவின் மூத்த தலைவர்கள் விசாரணை வலையில் சிக்குவதால் மற்ற நிர்வாகிகள் இப்படி புலம்ப தொடங்கி உள்ளனர்.

அறிக்கை மட்டும் விட்டார்
தங்களுக்கு எதிராக வழக்கு வந்தாலும் கட்சி தலைமை கண்டிப்பக்க காக்காது என்ற விரக்தியில் சில நிர்வாகிகள் இருக்கிறார்கள். அதிமுகவினருக்கு எதிரான வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வோம், அதிமுகவை மிரட்டி பணிய வைக்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டார். ஆனால் அந்த அறிக்கைக்கு பின் இபிஎஸ் எதுவுமே செய்யவிலை, திமுக அரசு தொடுத்த வழக்குகள் குறித்து எதுவுமே பேசவில்லை என்று நிர்வாகிகள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.

வழக்கு எதிர்கொள்ள உதவி
ஒரு அறிக்கையோடு இபிஎஸ் அமைதியாகிவிட்டார் என்று கட்சி நிர்வாகிகள் புலம்பி வருகிறார்கள். நமக்கு எதிராக இப்படி வழக்கு வந்தால் கட்சி உடன் நிற்குமா என்று சில தலைகள் இப்போதே யோசிக்க தொடங்கிவிட்டதாக இராயப்பேட்டை வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். இன்னும் பல மாஜிக்கள் வரும் நாட்களில் அரசின் விசாரணை வளையத்திற்குள் வரலாம் என்பதால் நிர்வாகிகள் இடையே கொஞ்சம் டென்ஷன் கூடி இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications