"நல்லா ராகமா பாடுங்கம்மா"ஆர்ப்பாட்ட மேடையில் இசைக் கச்சேரி.. பாட்டு பாட சொல்லி தந்த ஜெயக்குமார்!
சென்னை: சென்னையில் மின்கட்டண உயர்வுக்கு எதிரான அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஜிஆர் பாட்டு பாடி தொண்டர்களை உற்சாகமடைய வைத்துள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து இன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுக சார்பாக முக்கிய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டங்களின் சார்பில் சென்னை பட்டாளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலை 9 மணி முதலே அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வரத் தொடங்கினர். இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சோர்வடைந்த தொண்டர்கள்
இதனிடையே காலையில் இருந்தே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த தொண்டர்கள், சோர்வடைந்து ஆங்காங்கே அமர தொடங்கினர். இதனை கண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது பாணியில் வழக்கம்போல் எம்ஜிஆர் பாடலை பாடி திமுக அரசை விமர்சிக்க தொடங்கினார்.

களம்புகுந்த ஜெயக்குமார்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, சொத்து வரி உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு மேடைகளிலும் பாட்டு பாடும் திறமையை ஜெயக்குமார் வெளிப்படுத்தியுள்ளார். சொத்து வரி உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது, கடுமையான வெயிலால் சில நிர்வாகிகள் மயக்கமடைந்தனர். இதனால் தொண்டர்கள் சோர்வடைந்த போது, ஜெயக்குமார் எம்ஜிஆர் பாடலை பாடி உற்சாகப்படுத்தினார்.

ப்ளாஷ்பேக்
அப்போது அருகே இருந்த திண்டுக்கல் சீனிவாசன், இன்னும் இரு பாடல்கள் பாடுங்கள் என்று பேச, ஆர்ப்பாட்ட மேடையே இசைக் கச்சேரி மேடையாக மாறியது. அதேபோல் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட மேடையையும் ஜெயக்குமார் விட்டு வைக்கவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் சிரிப்பலை
எம்ஜிஆரின் மலைக்கள்ளன் படத்தில் இடம்பெற்ற "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடலை தொண்டர்களுடன் சேர்ந்து பாடி விமர்சித்தார். இடைஇடையே நல்ல ராகத்தில் பாடிய ஜெயக்குமார், தொண்டர்களும் அதே ராகத்துடன் பாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த பாடல் முடியும் போது, 'நல்லா ராகம்மா பாடுங்கம்மா' என்று ஜெயக்குமார் பேசியது தொண்டர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications