அதிமுக அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது.. பாஜக கூட்டணி உள்பட பல முக்கிய விவகாரங்கள் ஆலோசனை?
சென்னை: அதிமுக அவைத்தலைவர் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக தேர்தல் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது.

இதன்படி, அதிமுக செயற்குழு கூட்டம் கடந்த ஏபரல் 7 ஆம் தேதி நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்தது. ஆனால், திடீரென இந்தக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், அதிமுகவின் அவசர செயற்குழு மீண்டும் 16 ஆம் தேதி கூடும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி, அக்கட்சியின் செயற்குழு இன்று கூடியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்படி பழனிசாமிக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளரக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இதுதான்.
செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. அதன்பிறகு பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவது குறித்து ஆலோசனை நடைபெற இருக்கிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது

இந்த கூட்டத்தில், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள். செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். கர்நாடக தேர்தல் விவகாரம் மட்டும் இன்றி அதிமுக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்தும் இந்த செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. பாஜக உடன் கூட்டணி என்று அக்கட்சியின் தேசிய தலைவர்கள் உறுதிபடுத்தினாலும் தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை அதிமுக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருப்பதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அண்ணாமலையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரடியாகவே விமர்சித்தார். இரு தலைவர்களுக்கும் இடையே வார்த்தை யுத்தம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், இன்றைய செயற்குழு கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணி குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications