அதிமுகவுக்கு என்னாச்சு.. அதிகரிக்கும் பூசல்கள்.. வேகமாக கரையும் கட்சி!
உள்கட்சி பூசலால் அதிமுக வேகமாக கரைந்து வருவதாக சொல்லப்படுகிறது.
Recommended Video
சென்னை: கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவே கரைந்து போய்விடும் போல தெரிகிறது. உள்ளுக்குள் ஏகப்பட்ட உட்கட்சி பூசல்கள், குழப்பங்கள், அதிருப்திகள் என நீண்டு கொண்டே போகிறது!
முதலாவதாக, ஈபிஎஸ்-ஓபிஎஸ் இடையே தலைதூக்கி தாறுமாறாக போய் கொண்டுள்ளது ஈகோ பிரச்சனை! அம்மா இருந்தபோது கிடைத்த மரியாதையும், செல்வாக்கும் தற்போது கிடைப்பதில்லை என்று ஓபிஎஸ் புலம்புவதாக சொல்லப்பட்டது.
இதைதவிர 2 வருடமாகவே இவர்களுக்குள் நீயா, நானா என்ற ஆதிக்கம், அதிமுக ஆதரவாளர்களை மேலும் பிளவுக்கு இட்டு சென்றது. இதன் விளைவு தேனி டூ வாரணாசி என்று தொடக்கம் தோன்றியுள்ளது!
அதிமுகவில் யாரெல்லாம் அதிருப்தியில் இருக்காங்க.. லிஸ்ட் போட்டுத் தூக்க தயாராகும் தினகரன்
மன்னார்குடி தரப்பு
இரண்டாவதாக, பிரச்சாரத்திற்கு முன்பு ஆகட்டும், இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சாரம் ஆகட்டும், இதுவரை எடப்பாடி தரப்பு மன்னார்குடி நபர்களை மருந்துக்கு கூட விமர்சிக்கவில்லையாம். இங்கதான் நிறைய விஷயம் இடிக்கிறது!
சின்னம்மா
மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி இவர்கள்தான் அதிக அளவில் சசிகலா தரப்பை நேரடியாக விமர்சிப்பவர்கள். ஆனால் பலர் இன்னமும் மன்னார்குடி அண்டர்கிரவுண்ட் சமாச்சாரத்தில் டீலிங்கில் உள்ளதாக சொல்லப்படுகிறது! பிசினஸ் டீலிங் என்று ஒத்த வார்த்தையில் சொல்லி விடலாம். ஆனால் ராஜேந்திரபாலாஜி போன்றவர்கள் இன்னமும் "சின்னம்மா" என்றே கூப்பிடுகிறார்கள்.
பக்கா ஸ்கெட்ச்
மூன்றாவதாக, தினகரன் போடும் பக்கா ஸ்கெட்ச்தான் அதிமுக தனது பலத்தை இழக்கவும் காரணமாகிறது. இந்த 3 வருட ஆட்சியில் பொறுப்பாளர்கள் நியமனத்திலிருந்து தேர்தலில் சீட் தருவது வரை நிறைய அதிருப்திகளை எடப்பாடி தரப்பு சம்பாதித்து உள்ளது. குறிப்பாக ஓபிஎஸ் தரப்பில் சொல்லப்படும் நபர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும், போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்றும் கூறப்பட்டது. மேலும் வாய்ப்புகளை இழந்தவர்கள், அதிருப்தி நபர்கள் தினகரன் பக்கம் ஒவ்வொருவராக சாய ஆரம்பித்துள்ளார்கள். இல்லையென்றால், தினகரனே தன் பக்கம் இழுக்கும் வியூகத்தை கையில் எடுத்துள்ளார்.
செம்மலை
நான்காவதாக, ஓபிஎஸ் ஆதரவு 11 எம்எல்ஏக்கள் சம்பந்தப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம், செம்மலை உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்
இப்படி ஒரு வழக்கை கோர்ட் வரை கொண்டு சென்றது திமுக கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோர்தான். ஐகோர்ட்டில் தள்ளுபடி ஆகி, சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. ஒருவேளை அதில் எதிரான தீர்ப்பு வந்தால், ஓபிஎஸ் பதவி கேள்விக்குறிதான். சொல்ல முடியாது.. எம்எல்ஏ பதவியே இருக்குமா, இருக்காதா என்று தெரியாது.
யூகம்
ஐந்தாவதாக, உள்ளுக்குள் நிறைய புகைச்சல் இப்படி அதிமுகவுக்குள் எழுந்துள்ளதாலும், நாளை நிலைமை என்னாகும்? கோர்ட் தீர்ப்பு எப்படி வரும் என்றெல்லாம் யூகிக்க முடியாததால்தான் மகனுக்கு மட்டும் எப்படியாவது அமைச்சர் பொறுப்பை வாங்கி தர ஓபிஎஸ் முயல்வதாக சொல்லப்படுகிறது. இதுவும் அதிமுக தலைமைக்கு கடுப்பைதான் ஏற்றி உள்ளதாம்.
அதிமுக கதி?
கடைசியில் நிலைமை என்னவாகும்.. அதிமுக-பாஜக என்று ஒரு தரப்பும், அதிமுக-அமமுக என்று ஒரு தரப்பும் பிரிந்து.. ஆளுக்கு ஒரு பக்கம் போய் சேர்வதுதான் நடக்க போகிறதோ என்னவோ.. அப்படின்னா ஆழ வேரூன்றி, அருகுபோல் தழைத்து படர்ந்து கோடிக்கணக்கான தொண்டர்களை பெற்றுள்ள கட்சியான அதிமுக கதி????