உயிர்போகும் நாளில் என் உடலில் அதிமுகவின் கொடி போர்த்துவதே பெருமை... ஓபிஎஸ் உருக்கம்
Recommended Video
சென்னை: என் உயிர் போகும் நாளில் அ.தி.மு.க. கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக லட்சியமாக வைத்து வாழ்கிறேன்' என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் பா.ஜ.கவில் இணைந்துவிடுவார் என்றும், அவருக்கு ஆளுநர் பதவி கேட்கப்படுவதாகவும் அமமுக வைச் சேர்ந்த தங்கத் தமிழச்செல்வன் கூறியிருந்தார்.
அதே போல், பாஜகவின் ஏஜெண்டாக இருந்ததால் தான் பன்னீர்செல்வத்தை பதவியில் இருந்து இறக்கினோம் என்று டிடிவி தினகரனும் கூறினார். இதுகுறித்து நிருபர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், ஓ. பன்னீர் செல்வம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை விவரம்:
ஆர்.கே.நகர் தொகுதியிலேயே இரட்டை இலை சின்னம் தோல்வி... டிடிவி தினகரன் சுளீர்
உள்நோக்கம்
அதில், அ.தி.மு.கவின் ஒரு சாதரண தொண்டனாக பொது வாழ்க்கையில் பணியாற்றிய என்னை, பெரியகுளம் நகராட்சித் தலைவராகவும், சட்டப்பேரவைக்குள் நுழையும் வாய்ப்பையும், அமைச்சராகவும் முதல்வராகவும் ஆவதற்கான வாய்ப்புகளை வழங்கி, நான் கனவிலும் எதிர்பார்க்காத உயரங்களைத் தந்த அ.தி.மு.கவை விட்டு நான் பா.ஜ.கவுக்கு செல்லப்போகிறேன் என்று ஒரு அடுக்காத புரளியை அவதூறாக பரப்பிவருகின்றன சில உள்நோக்கம் கொண்ட ஊடகங்கள்.
|
மோடியைப் பாராட்டினார்
நான் வணங்கும் அம்மா, அரசியல் ரீதியாக தேர்தல் களத்தில் எதிர்நிலைகள் கொண்டபோதிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மோடியைப் பாராட்டினார். ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த பாதத் தடத்தில்தான் இந்த முறை பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தோம்.
லட்சியம்
உயிர்போகும் நாளில் என் உடலில் அ.தி.மு.கவின் கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக, லட்சியமாக கொண்டு வாழும் என்னை, கட்சிமாறப் போகிறேன், வேறு கட்சிக்கு போகப் போகிறேன் என்றெல்லாம் வடிகட்டிய பொய்யை வதந்திகளாக்கி அதனை இந்திய விடுதலைக்கு குரல் கொடுத்த ஊடகங்கள் கூட நடுநிலை என்பதை மறந்து யாருக்கோ வால் பிடித்து புரளியால் குறளி வித்தை செய்வதை நினைத்து மிகுந்த வேதனையடைகிறேன்.
மக்களும் ஏற்கமாட்டார்கள்
என்மீதான, பொய் குற்றச்சாட்டுகளை கழகத் தொண்டர்களும், என் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழக மக்களும் ஏற்கமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அமமுகவினர் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.