கன்னத்தில் அடிக்க வந்த ஜெயக்குமார்.. கையைப் பிடித்த நயினார் நாகேந்திரன்! அரசியல் தாண்டிய நெருக்கம்!
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை இன்று செல்லமாக கன்னத்தில் அடிக்க முயன்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். நயினார் நாகேந்திரன், அதிமுகவில் இருந்தபோது இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில், இன்று ஒரு நிகழ்வில் பங்கேற்றபோது இருவரும் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.
சிட்டி யூனியன் வங்கியின் 120 ஆம் ஆண்டு விழா இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார். மேலும் பல அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர். இந்த விழாவின் போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

கன்னத்தில் தட்டிய ஜெயக்குமார்
நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தபோது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நயினார் நாகேந்திரனை செல்லமாக கன்னத்தில் அடிக்க முயன்றார். அவரது கையைப் பிடித்துக் கொண்டார் நயினார் நாகேந்திரன். அதிமுக - பாஜக தலைவர்கள் நெருக்கமாக அளவளாவிக் கொண்ட காட்சி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பாஜக - அதிமுக இடையே அண்மையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. கடந்த 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக இந்தக் கூட்டணி முறிந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலை முன்வைத்து மீண்டும் கூட்டணி அமைந்துள்ளது. எனினும், இரு கட்சிகளுக்குள்ளும் இன்னும் இணக்கம் ஏற்படவில்லை என்ற கருத்து உள்ளது. இந்தச் சூழலில் தான் இன்று அதிமுக - பாஜக தலைவர்கள் மிகுந்த நெருக்கம் பாராட்டியுள்ளனர்.
நயினார் நாகேந்திரன்
2001 ஆம் ஆண்டு முதல் 2006 வரை, முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியவர் நயினார் நாகேந்திரன். மின்சாரம், தொழில்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சராக பத வகித்தார். 2006 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தோல்வி அடைந்த நிலையில், 2011ல் மீண்டும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அதன்பிறகு 2016ல் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
அதிமுக - பாஜக
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆகஸ்ட் 2017-ல் அதிமுக கட்சியை விட்டு வெளியேறி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் நயினார் நாகேந்திரன். கட்சிக்கு வந்த உடனேயே மாநில பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார் நயினார் நாகேந்திரன். 2021 ஆம் ஆண்டில், பாஜக வேட்பாளராக நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, அவர் தமிழ்நாடு சட்டமன்ற பாஜக தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications