“மௌனம் நன்மைக்கே”.. சிரித்துக்கொண்டே செங்கோட்டையன் சொன்ன வார்த்தை! டெல்லி விசிட்டால் அதிமுகவில் பரபர
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லிக்குச் சென்று பாஜக மேலிட தலைவர்களை சந்தித்த நிலையில் தொடர்ந்து அவர் மௌனம் காத்து வருகிறார். இந்நிலையில், தொடர் மௌனம் குறித்த கேள்விக்கு "மௌனம் அனைத்தும் நன்மைக்கே" எனச் சிரித்தபடி கூறியுள்ளார் செங்கோட்டையன்.
2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தச் சந்திப்பின்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களும் உடன் இருந்தனர்.

அமித் ஷா - எடப்பாடி திடீர் மீட்டிங்
பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று அதிமுக கூறி வந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று, மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், கூட்டணி குறித்து பேசவில்லை என்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மக்கள் பிரச்சினைகளை தெரிவிப்பதற்காக மத்திய அமைச்சரை சந்தித்தேன் என பழனிசாமி விளக்கம் அளித்தாலும், அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் இது 2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையிலேயே அமித் ஷாவின் எக்ஸ் தள பதிவும் இருந்தது.
செங்கோட்டையன் டெல்லியில்
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு தொடர்பான பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் அடங்குவதற்குள் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
எடப்ப்பாடி பழனிசாமியின் சந்திப்பை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று முன்தினம் அமித் ஷாவை சந்தித்தார். இந்நிலையில் அதே நாளில் அமித் ஷாவையும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்துள்ளார்.
அதிமுகவில் என்ன நடக்கிறது?
செங்கோட்டையன் டெல்லி சென்ற விவகாரம் அரசியல் வட்டாரங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் டெல்லி குறித்து ஓமலூரில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி நடத்தும் கூட்டங்களில் பங்கேற்காமல் அண்மைக் காலமாக செங்கோட்டையன் புறக்கணித்து வருவதால், இருவருக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்தச் சூழலில் தான் எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டையனும் தனித்தனியாக டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்துள்ளனர்.
செங்கோட்டையன் பேட்டி
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டை போட்டால், செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவை கட்டமைப்பது குறித்தும் பாஜக தலைமை விவாதித்து இருக்கலாம் என்று தகவல்கள் சிறகடிக்கின்றன.
இந்நிலையில் இன்று அந்தியூரில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன். இந்த நிலையில் சென்னை செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மௌனம் அனைத்தும் நன்மைக்கே
செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பினர். மீண்டும் டெல்லி போகிறீர்களா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு கைகூப்பியபடியே சிரித்தபடி "ஸ்டேஷன் தான வந்திருக்கேன்" எனக் கூறிவிட்டுச் சென்றார் செங்கோட்டையன்.
"தொடர்ச்சியாக நீங்கள் மௌனமாகவே இருப்பதன் காரணம் என்ன?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், "மௌனம் அனைத்தும் நன்மைக்கே" எனச் சிரித்தபடி கூறிவிட்டுக் கிளம்பினார்.












Click it and Unblock the Notifications