ராமேஸ்வரம் செல்கிறாரா செங்கோட்டையன்? தூத்துக்குடி விமானத்தில் வந்து காரில் பயணம்.. ட்விஸ்ட்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் பாலத்தை திறந்து வைப்பதற்காக ராமேஸ்வரம் வரும் நிலையில், தூத்துக்குடி விமானத்தில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் காரில் ராமேஸ்வரம் பயணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றிரவு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து செங்கோட்டையன் உரையாடிய நிலையில், இன்று பிரதமரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தை திறந்த வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சில மணி நேரத்தில் வரவுள்ளார். இதற்காக ராமேஸ்வரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவரை தமிழக அரசு தரப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்கவுள்ளார்.

அதேபோல் ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக தரப்பில் அண்ணாமலை, தமிழிசை, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளனர். அவர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு காரணமாக செங்கோட்டையன் தனித்து பயணிக்கிறார். அதுமட்டுமல்லாமல் அதிமுகவினர் பலருக்கும் தெரியாமல் ரகசியமாக சென்று டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இதனால் செங்கோட்டையனின் செயல்பாடுகள் அதிமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இரவில் சென்று செங்கோட்டையன் சந்தித்தார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகுமா அல்லது செங்கோட்டையன் கட்சி மாறுகிறாரா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஆனால் அதிமுகவின் தீவிர விசுவாசியான செங்கோட்டையன் கட்சி மாறுவதற்கான வாய்ப்பே கிடையாது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராமேஸ்வரம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க செங்கோட்டையன் புறப்பட்டிருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானத்தில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், காரில் ராமேஸ்வரத்திற்கு சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்கப்பட்ட போது, கிடைக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி மட்டுமல்லாமல் ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் செங்கோட்டையன் ராமேஸ்வரம் சென்றிருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications