எடப்பாடி போட்டோவுடன் வந்த செங்கோட்டையன்.. மீண்டும் இணக்கமா? ஓவர் நைட்டில் நடந்தது என்ன?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று திடீரென எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கெல்லாம் கட்சியில் சீனியர். அதிமுக முன்னாள் அமைச்சரும் கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன், சமீப காலமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி காரணமாக அவரை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.

எடப்பாடி கூட்டங்களை புறக்கணித்த செங்கோட்டையன்
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதற்காக கொங்கு பகுதியை சேர்ந்த விவசாயிகள் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த மாதம் நடத்திய பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இல்லாததைக் குறிப்பிட்டு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை தவிர்த்து வந்தார் செங்கோட்டையன். அதோடு, சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக எடப்பாடி கூட்டிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். அந்த நேரத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பரபரப்பைக் கிளப்பினார்.
டெல்லிக்கு சென்று மீட்டிங்
இந்தச் சூழலில் அண்மையில் திடீரென டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிசாமி சென்னை வந்ததுமே கடந்த 28ஆம் தேதி திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து விட்டுத் திரும்பினர்.
இது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை எழுப்பி விட்டுள்ளது. செங்கோட்டையனை வைத்து அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜக திட்டமிட்டு வருவதாகவும் கருத்துகள் நிலவுகின்றன. அதிமுக உடன் கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டு வரும் நிலையில் அதற்கு எடப்பாடி ஒத்துவரவில்லை என்றால் செங்கோட்டையனை வைத்து குடைச்சல் கொடுக்க பாஜக தலைமை திட்டமிட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இறைவன் அருளால் மெய்வருத்தி முப்பது நாட்கள் நோன்பு கடைபிடித்து ஈகை கொடுத்து மனம் மகிழ்ந்து கொண்டாடும் #ரமலான் #திருநாள் எல்லா செல்வங்களையும் பெற்று வாழ்க வாழ்த்துக்கள் 💐💐💐 pic.twitter.com/rQy81Ab6zr
— கே.ஏ.செங்கோட்டையன் - Say No To Drugs & DMK (@KASenkottaiyan) March 31, 2025
எடப்பாடி பழனிசாமி படத்துடன்
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் ரமலான் தின வாழ்த்துச் செய்தியை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் செங்கோட்டையன். எடப்பாடி பழனிசாமியை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்து வந்த செங்கோட்டையன் திடீரென எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் வாழ்த்து படம் வெளியிட்டுள்ளது அவரது ஆதரவாளர்களுக்கே ஷாக் கொடுத்தது.
செங்கோட்டையன் தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அந்த வாழ்த்து போஸ்டரில் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது புகைப்படங்களை காட்டிலும் பெரிதாக எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதும் கவனம் பெற்றுள்ளது.
மீண்டும் இணக்கம்?
மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் செங்கோட்டையன் இணக்கமாகிவிட்டாரா அல்லது டெல்லி பாஜக தலைமையின் அறிவுறுத்தல் காரணமாக செங்கோட்டையன் இதுபோன்ற நகர்வைச் செய்துள்ளாரா என்ற பல்வேறு யூகங்கள் தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளன.
இதற்கிடையே, சென்னை செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்த செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். "தொடர்ச்சியாக நீங்கள் மௌனமாகவே இருப்பதன் காரணம் என்ன?" என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், "மௌனம் அனைத்தும் நன்மைக்கே" எனச் சிரித்தபடி கூறினார்.












Click it and Unblock the Notifications