தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பாஜகவின் எண்ணம்.. ஒருநாளும் நடக்காது.. அன்வர் ராஜா ஒரே போடு!
சென்னை: தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பாஜகவின் எண்ணம், ஒருக்காலும் நடக்காது என்று அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், அன்வர் ராஜாவின் கருத்து பேசுபொருளாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாக அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. உயர்மட்ட தலைவர்கள் நெருக்கமாக இருந்தாலும், இதுவரை அடிமட்ட தொண்டர்கள் கூட்டணியை விரும்பவில்லை. இன்னும் இணக்கமாக செயல்படாததால், அதிமுக - பாஜக கூட்டணி டேக் ஆஃப் ஆகவில்லை என்ற எண்ணம் அக்கட்சியினர் மத்தியிலேயே தோன்றி இருக்கிறது.

அதிமுக - பாஜக கூட்டணி
இதன் காரணமாக அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் பாஜகவினர் வாக்குகளும், பாஜகவினர் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுகவினர் வாக்குகளும் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்து நாளிதழுக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா அளித்துள்ள பேட்டி புதிய விவாதத்தை தொடங்கி இருக்கிறது.
அன்வர் ராஜா பேட்டி
அதில் அன்வர் ராஜா பேசுகையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பது வெற்றியை அடிப்படையாக கொண்டது. அதனால் இந்தியாவில் பல கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதை போல், அதிமுக கூட்டணி அமைத்ததும் இயல்பானதுதான். பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால், சிறுபான்மை சமூக வாக்குகள் பெரும்பாலும் கிடைக்காது தான்.
சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது
ஆனால் சிறுபான்மை சமூகத்தில் உள்ள அதிமுகவினரின் வாக்குகள் நிச்சயமாக கிடைக்கும். அதேபோல் கூட்டணி ஆட்சியை தமிழ்நாடு மக்கள் என்றைக்கும் விரும்பியது இல்லை. அதனால் அதிமுக பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அதுமட்டுமல்லாமல் முதல்வர் தேர்வில் பாஜகவின் திட்டம் பலிக்க்காது.
பாஜகவால் காலூன்ற முடியாது
எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்திதான் தேர்தலில் போட்டியிடுகிறோம். அதேபோல் தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பாஜகவின் எண்ணம் பலிக்காது. அது ஒருக்காலும் நடக்காது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கூட்டணிக்கு தலைமை தாங்கப் போவது அதிமுக தான். அதற்கு தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். அதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடம் கிடையாது.
ஒருங்கிணைப்பு இல்லாதது ஏன்?
இதனை பாஜக ஏற்கவில்லை என்றால், இரு கட்சிகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு சாத்தியம் இல்லை. ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகிய 3 பேரையும் கட்சிக்குள் சேர்க்காவிட்டால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படலாம் என்ற கணிப்பு தவறானது. தனிமனிதர்களை விடவும் அதிமுக தொண்டர்கள் கட்சியைத் தான் பெரிதாக மதிப்பார்கள்.
அதிமுகவில் பிளவு
அதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தவித பின்னடைவும் இல்லாமல், அதிமுக வெற்றி பெறும். அதுமட்டுமல்லாமல் அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படவில்லை. எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராகவே அதிமுக உள்ளது என்று தெரிவித்துள்ளார். அன்வர் ராஜாவின் இந்த பேட்டி தமிழக அரசியலில் புதிய விவாதமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications