அதிமுக பொதுக்குழு, செயற்குழு ஜனவரி 9ஆம் தேதி கூடுகிறது - டிச.27ல் சென்னையில் பிரச்சாரம்
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சென்னை: அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் டிசம்பர் 27ஆம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
234 இடங்களை கொண்டுள்ள தமிழக சட்டசபையின் ஆயுள்காலம், அடுத்த ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.
கொரோனா காலமாக இருந்தாலும் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சியினரும் படு பரபரப்பாக தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டனர்.
2021 சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. திமுக பிரச்சார வியூகத்தை ஆரம்பித்து விட்டது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்படாமலேயே பிரச்சாரத்தை தொடங்கி விட்டன அரசியல் கட்சிகள்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்றிரவு 9 மணி அளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, சி.வி.சண்முகம் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதிமுக பொதுக்குழு எப்போது கூடும் - ஓபிஎஸ், இபிஎஸ் அவசர ஆலோசனை - விரைவில் தேதி அறிவிப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எப்போது நடத்துவது, அதற்கான தேதியை உறுதி செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் 2021ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி சனிக்கிழமை சென்னை ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய அறிவிப்பு.
— AIADMK (@AIADMKOfficial) December 21, 2020
கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு. pic.twitter.com/Kh8MM1UMfz
இதனிடையே வரும் 27ஆம் தேதி அதிமுகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் நடைபெறும் என்றும் அன்றைய தினம் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா விதிகளை பின்பற்றி பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு.
— AIADMK (@AIADMKOfficial) December 21, 2020
கழக தேர்தல் பிரச்சார தொடக்கம் பொதுக்கூட்டம். pic.twitter.com/HY7ovXcrg2
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்காக பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ள நிலையில் சட்டசபைத் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சியினரும் ஆயத்தமாகி வருகின்றனர். ஆளும் கட்சியான அதிமுக ஆட்சியை தக்கவைக்க கனஜோராக களமிறங்கி விட்டது.