கிளைச் செயலாளர் டூ பொதுச்செயலாளர்! அதிமுகவில் அபார வேகத்தில் வளர்ந்த எடப்பாடி பழனிசாமி!
சென்னை: அதிமுகவில் சாதாரண கிளைச் செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, இன்று அக்கட்சிக்கே பொதுச்செயலாளர் ஆகி வரலாற்றில் தடம் பதித்திருக்கிறார்.
Recommended Video
கிளைச்செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர், கொள்கை பரப்புச் செயலாளர், அமைப்புச் செயலாளர், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நால்வர் குழுவில் இடம், இணை ஒருங்கிணைப்பாளர், என படிப்படியாக உயர்ந்து இன்று மணிமகுடத்தை சூட்டிக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் யாரும் எந்த பதவிக்கும் வரமுடியும் என்பதை அக்கட்சி மீண்டும் மீண்டும் இது போன்ற நிகழ்வுகளால் உணர்த்தி வருகிறது.

தடாலடி நபர்
கட்சியை வளர்ப்பதில் தடாலடியாக செயல்பட்டதாலும் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு தனது பக்கம் நின்று ஆதரவு தெரிவித்ததுடன், எடப்பாடி ஒன்றியம் முழுவதும் அம்மா பேரவையை நிறுவியதாலும், யார் இந்த பழனிசாமி என ஜெயலலிதாவே நேரடியாக விசாரித்து தெரிந்து கொள்ளும்படி தனது இமேஜை வளர்த்துக் கொண்டார். 1989-ஆம் ஆண்டு ஜெயலலிதா அணி சார்பில் எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

வெல்லமூட்டை பழனிசாமி
அன்று முதல் வெல்லமூட்டை பழனிசாமி என்ற கிண்டலான பெயர் எடப்பாடி பழனிசாமி என மாறியது. அதோடு அவரது நடவடிக்கைகளிலும் மாற்றம் தென்படத் தொடங்கியது. எளிதில் கோபப்படக் கூடிய குணம் கொண்ட எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினரான பிறகு தன்னை பொறுமையின் சிகரமாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்தார். இதையடுத்து அவருக்கு பதவிகளும் தேடி வரத் தொடங்கின. சேலம் வடக்கு மாவட்ட இணைச் செயலாளர், பிறகு சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர், கொள்கை பரப்புச் செயலாளர், அமைப்புச் செயலாளர் என பல புரோமோஷன்களை கொடுத்தார் ஜெயலலிதா.

நால்வர் குழு
இதுமட்டுமல்லாமல் 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்சியினரின் பிரச்சனைகளை விசாரிக்க ஜெயலலிதா நியமித்த நால்வர் குழுவில் எடப்பாடி பழனிசாமியும் இடம் பிடித்திருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதா இந்தளவு முக்கியத்துவம் கொடுத்ததற்கு காரணம், சேலம் மாவட்ட திமுகவில் பவர்ஃபுல் தலைவராகவும், அமைச்சராகவும் திகழ்ந்த வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தில்லாக அரசியல் செய்ததேயாகும்.

அரசியலில் வல்லவர்
அரசியலை பொறுத்தவரை நல்லவராக இருந்தால் மட்டும் போதாது வல்லவராகவும் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, எடப்பாடி பழனிசாமிக்கு பொருந்தும். தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஒரு கட்சியில் சாதாரண கிளைச் செயலாளராக பதவி வகித்த ஒருவர் பிற்காலத்தில் அக்கட்சிக்கே பொதுச்செயலாளர் ஆகிய நிகழ்வு முதல்முறையாக நடந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பரிணாமங்கள் தமிழகம் கடந்து தேசியளவில் கவனம் ஈர்த்துள்ளன.












Click it and Unblock the Notifications