பொதுச்செயலாளர் பதவி: சசிகலா வழக்கு தொடர முடியாது.. அதிமுக வைத்த பாயிண்ட்.. 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என சசிகலா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 6 ஆம் தேதிக்கு சென்னை ஹைகோர்ட் ஒத்திவைத்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பின்னர் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் கடந்த 2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

AIADMK general secretary post Sasikala fight in high court What will Edappadi Palanisamy do?

தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். சென்னை 4-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை ஏற்று, சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.

சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும், இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தநிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா அப்பீல் செய்தார். இந்த வழக்கு அப்பீல் வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் பதிவியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது என தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவி அதிமுகவில் இருக்கிறதா? அதற்கு விதிகள் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதால் இடைக்கால பொதுச்செயலாளர் நியமிக்கப்பட்டதாகவும், எம்.ஜி.ஆர். இறந்தபோது கூட இதேபோன்ற இடைக்கால ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாகவும், கட்சியில் இருந்து என்னை நீக்கவோ, கட்சி விதிகளில் மாற்றம் செய்யவோ அவர்களுக்கு அதிகாரமில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ஒருவேளை நீங்கள் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதே செல்லாது என்றால் நீங்கள் எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர், பொதுக்குழு மூலம் உறுப்பினர்கள் தான் தம்மை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்ததாகவும், பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கும் வரை தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிடோர் முன்மொழிந்து, மற்ற பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்து நிலையில், தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் அடிப்படை அமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அடிப்படை அமைப்பு மாற்றப்பட்டதாக கூறுவதற்கு இது ஒன்றும் அரசியல் சாசனம் இல்லையே? என்றும், அதிமுகவில் நீங்கள் அடிப்படை உறுப்பினரா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, நீண்ட காலமாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் என சசிகலா தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

அதிமுக மற்றும் அதன் பொதுச்செயலாளர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாரயணன் ஆஜராகி, பொதுக்குழுவிற்கு மட்டுமே உச்சபட்ச அதிகாரம் உள்ளதாகவும், இரண்டாயிரத்து 665 பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் எனவும், அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக ஜெயலலிதா தேர்வு செய்யபட்டதாக தெரிவித்தார்.

கடந்தாண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கபட்டு, சட்ட விதியில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாகவும், இந்த மனுவை தாக்கல் செய்த போது சசிகலா உறுப்பினராக இல்லை என தெரிவித்தார்.

பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளரை தவிர பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் மற்றவர்களுக்கு இல்லையே, பொதுக்குழு முறையாக நடைபெறவில்லை என்றால் அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் வழக்கு தொடர உரிமை இருக்கிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அதிமுக மற்றும் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் வழக்கு தொடர உரிமை உள்ளதாகவும், ஆனால் சசிகலாவின் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்தார். வாதங்கள் நிறைவடையாததால் விசாரணையை நீதிபதிகள் இன்று தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக தரப்பு முன் வைத்த வாதத்தில், பழைய விதிகளை அடிப்படையாக கொண்டு சசிகலா வழக்கு தொடர முடியாது. அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியே பொதுச்செயலாளர், கட்சி, சின்னம் ஒதுக்கும் விண்ணப்பத்தில் கையெழுத்திடும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கே உள்ளது" என்று வாதிடப்பட்டது

இதே போல் ஓ பன்னீர் செல்வம் தரப்பு வைத்த வாதத்தில், பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டனர். சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் என்று வாதிட்டனர். தொடர்ந்து இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள், சசிகலா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை வரும் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+