பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்..மா.செ.க்கள் புகழ் பாடவா களஆய்வு? புலம்பும் அதிமுக ர.ர.கள்
சென்னை: மாவட்ட செயலாளர்களை கண்காணித்து அவர்களது பணி திருப்தியாக இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்ட நிலையில், அதிமுக கள ஆய்வு குழுவினர் தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், கள ஆய்வு என்ற பெயரில் மா.செ.க்கள் புகழ்பாடும் கூட்டங்கள் தான் நடப்பதாகவும், கட்சியின் உண்மை நிலவரத்தை தலைமைக்கு கொண்டு செல்ல முடியாமல் தொண்டர்கள் தவித்து வருவதாகக் கூறுகின்றனர் அடிமட்ட தொண்டர்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தயாராகி வருகிறது அதிமுக. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும் எனவும், மாவட்ட செயலாளர்களை கண்காணித்து அவர்களது பணி திருப்தியாக இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.

கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் உரிமை சீட்டுகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் சென்றடைந்ததா என்பது குறித்து கள ஆய்வு செய்து டிசம்பர் 7ஆம் தேதிக்குள் அறிக்கையாக அளிக்க வேண்டும் என கள ஆய்வுக் குழுவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.
இக்குழுவில், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, அ.அருணாசலம், மகளிரணி செயலாளர் பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த 11ஆம் தேதி இக்குழு கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிலையில், அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, கட்சியின் கிளை முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை கட்சியின் நிலைமை எப்படி இருக்கிறது, நிர்வாகிகளின் செயல்பாடுகள் என்னென்ன என்பது குறித்து வெளிப்படத் தன்மை வாய்ந்த அறிக்கையை கட்சிக்கு உண்மையாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். மேலும் மாவட்டங்கள் மற்றும் தொகுதி வாரியாக ஆய்வு செய்து கட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? வெற்றி தோல்விக்கான காரணங்கள், என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
மேலும் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளதா என்பதை கண்காணித்து அறிக்கை கொடுக்க வேண்டும் எனவும், பிற கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பில் இருக்கும் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பிற அணிகளுடன் தொடர்பில் இருக்கும் மாவட்ட செயலாளர் யார் என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். ஆனால், கள ஆய்வு என்ற பெயரில் மா.செ.க்கள் புகழ்பாடும் கூட்டங்கள் தான் நடப்பதாகவும், கட்சியின் உண்மை நிலவரத்தை தலைமைக்கு கொண்டு செல்ல முடியாமல் தொண்டர்கள் தவித்து வருவதாகக் கூறுகின்றனர் அடிமட்ட தொண்டர்கள்.

இதுதொடர்பாக சில அதிமுக தொண்டர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, "பொதுவாக ஆய்வுக்கூட்டம் என்றால் ஒவ்வொரு நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து பேச வேண்டும். ஆனால் மாவட்ட செயலாளர்கள் முன்னிலையிலயே கட்சி எப்படி இருக்கிறது? மாவட்ட செயலாளர் எப்படி வேலை செய்கிறார்? என கேட்டால் அனைத்து நிர்வாகிகளும் அருமையாக இருக்கிறது என்று தான் கூறுவார்கள். அது மட்டுமல்லாமல் உதாரணத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்திற்கு கள ஆய்வு பொறுப்பாளராக திண்டுக்கல் சீனிவாசனும், தங்கமணியும் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
ஆனால் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாவட்ட செயலாளர் எப்படி அதே மாவட்டத்தை ஆய்வு செய்ய முடியும்? என கேள்வி எழுப்பும் தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் கட்சியைப் பற்றி எதுவும் பேச முடியாது, அவரது தலைமையில் கட்சி மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்றுதான் கூற முடியும்.
மேலும் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்களும் மாவட்ட செயலாளர்களின் புகழ் பாடுபவர்களே தவிர குறைகளை சொல்ல முடியாது. இதே நிலைமைதான் பல அதிமுக மாவட்டங்களில் நிலவுகிறது. தேர்தலுக்கு வேலை ஆரம்பிக்கிறோம் என்ற பெயரில் கள ஆய்வுக் குழு என்ற ஒன்றை அமைத்து மாவட்டம் மாவட்டமாக செல்வது வீண். தொண்டர்களின் மனநிலை என்ன என்பதை அறிய வேண்டுமானால் ஒவ்வொரு மாவட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக சுற்று பயணம் செய்து ஒவ்வொரு நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து அவர்களது கருத்துக்களை கேட்க வேண்டும்.
அதை விடுத்து பெயருக்கு குழுவை அமைத்து ஆய்வு நடத்துவது என்பதெல்லாம் வீண். மேலும் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களின் பேச்சுக்களை நம்பி தேர்தலில் ஜெயிப்பது என்பது இயலாத காரியம். எனவே தொண்டர்களை கருத்துக்களை கேட்டு அதற்கேற்றார் போல் தேர்தல் வியூகங்களை வகுக்க வேண்டும். கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களை விட்டுவிட்டு பதவிக்காக இருப்பவர்களிடம் கருத்துக்களை கேட்டு எந்த பயனும் இல்லை. 'இதுக்கு பருத்திமூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம்" என்கின்றனர் உண்மையான அதிமுக அடிமட்ட தொண்டர்கள்..












Click it and Unblock the Notifications