வேண்டாத பொண்டாட்டி கைப்பட்டால் குத்தம், கால் பட்டால் குத்தம்! யாரைச் சொல்கிறார் நயினார் நாகேந்திரன்?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அதிமுக தலைவர்கள் அமித் ஷாவை சந்தித்து வருகிறார்கள் எனவும், திமுகவில் ஜனநாயகம் இல்லாததால் திமுக தலைவர்கள் அமித்ஷாவை சந்திக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மதுரை அண்ணா நகரில் பாரதிய ஜனதா கட்சியின் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி கூட்டம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர், நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி மாநில மாநாடு 21ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெறுகிறது. 1947 முதல் தற்போது வரை வரலாற்றில் உயர்த்திய வரியை குறைத்ததாக சரித்திரம் இல்லை.

நயினார் நாகேந்திரன்
இதனை பின்பற்றி தேர்தல் வருவதால் தமிழகத்தில் உயர்த்திய சொத்து வரி, மின்சார கட்டணத்தை தமிழ்நாடு அரசு குறைக்கும் என நினைக்கிறேன். ஜிஎஸ்டி வரி குறித்து மத்திய நிதியமைச்சர் மட்டும் முடிவெடுக்க மாட்டார். எல்லா மாநில நிதியமைச்சர்களும் முடிவெடுப்பார்கள். ஜிஎஸ்டி வரிக்கு மத்திய அரசு தான் காரணம் என தமிழக மக்களிடம் மாயை உருவாக்கி வைத்திருந்தனர். 18 சதவீதமாக இருந்த வரி தற்போது 5 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளதால் 90 சதவீதம் தொழில்துறையினர் பயன் பெறுவார்கள்.
முக ஸ்டாலின்
ஜி.எஸ்.டி வரி குறைப்பு என்பதை மக்களுக்கு தீபாவளி பரிசாக நிதியமைச்சர், பிரதமர் வழங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்க மறுக்கிறார். வேண்டாத பொண்டாட்டி கைப்பட்டால் குத்தம், கால்ப்பட்டால் குத்தம் என்பதை போல மத்திய அரசு எதை செய்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் அதை வரவேற்கும் நல்லெண்ணம் இல்லை.
அதிமுக பாஜக கூட்டணி
அதிமுகவில் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம். அமித்ஷா யாரை முதலமைச்சர் வேட்பாளராக சொல்கிறாரோ அவரை வெற்றி பெற வைக்க வேலை செய்ய தயார் என டிடிவி தினகரன் கூறியிருந்தார். தற்போது முதலமைச்சர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என கூறுகிறார். இனி வரும் காலங்களில் என்ன கூறுகிறார் என்பதை பார்ப்போம். 2026ல் அதிமுக பாஜக கூட்டணி திமுகவை ஆட்சியை விட்டு அகற்றும்.
அதிமுக ஜனநாயகம்
2029ல் நாடாளுமன்றத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பெரும்பான்மையாக செல்ல வேண்டும். அமித்ஷா சென்னையில் வந்து தேசிய ஜனநாயக கூட்டணியை அறிவித்தார். அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அதிமுக தலைவர்கள் அமித் ஷாவை சந்தித்து வருகிறார்கள். திமுகவில் ஜனநாயகம் இல்லாததால் திமுக தலைவர்கள் அமித் ஷாவை சந்திக்கவில்லை. திமுகவில் கலைஞர், ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என பதவி வகித்தால் எப்படி ஜனநாயகம் இருக்கும். தேர்தல்களில் தில்லுமுல்லு செய்திருந்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்திருக்கும்.
விஜய் அரசியல்
ஒரே நாடு ஒரே தேர்தலில் என்ன நன்மைகள் உள்ளது என விஜய் புரிந்து கொள்ள வேண்டும். அரசு பணம் செலவாவதை குறைக்க தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறோம். 5 வருடத்தில் சட்டமன்றம் நாடாளுமன்றம் உள்ளாட்சி தேர்தல்களால் அரசு பணம் செலவாகின்றது. அதை குறைக்க தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறோம். விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால் இதெல்லாம் தெரிந்திருக்கும். முன்னாள் முதல்வர் கலைஞர் கூட நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று எழுதியுள்ளார். இதையெல்லாம் விஜய்யை படித்து பார்க்கச் சொல்லுங்கள்" என கூறினார்.












Click it and Unblock the Notifications