அதிமுக மெம்பர்ஷிப்! 100 நாள் வேலை பணியாளர்கள் டூ மாணவர்கள்! கையில் படிவத்துடன் சுற்றும் ர.ர.க்கள்!
சென்னை: அதிமுக உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வயல் காட்டில் வேலை செய்பவர்கள் முதல் மாணவர்கள் வரை ஒருவர் விடாமல் உறுப்பினராக்கும் பணிகளில் அக்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதிய உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் திமுக நிர்வாகிகளோடு ஒப்பிடும் போது அதிமுக நிர்வாகிகள் குக்கிராமங்கள் வரை சற்று இறங்கியே களமாடுகிறார்கள் என்று சொல்லலாம்.

அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்த எடப்பாடி பழனிசாமி அதற்கான பொறுப்பை கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் வசம் கொடுத்தார். இந்நிலையில் இதுவரை அதாவது கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 1 கோடியே 60 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேருவதற்கு விண்ணப்பித்துள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எஞ்சியுள்ள 40 லட்சத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள எடப்பாடி பழனிசாமி அது குறித்துநேற்றைய தினம் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட் அண்ட் ரைட்டாக பேசியிருக்கிறார். இதையடுத்து இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தருமாறு ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் கேட்டிருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் உறுப்பினர்கள் சேர்ப்பதற்கும், உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்குமான காலக் கெடுவை ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனால் வயல்வெளிகளில் வேலை பார்ப்பவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அதிமுகவில் உறுப்பினராக சேர்த்துவிட வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சியில் கையில் படிவத்துடன் சுற்ற ஆரம்பித்துள்ளனர்.
தனது தலைமையை ஏற்று 2 கோடி உறுப்பினர்கள் அதிமுகவில் உள்ளார்கள் என்பதை மதுரை மாநாட்டில் பெருமிதத்துடன் அறிவிக்கும் திட்டத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications