நாங்கள் யாருக்கும் அடிமையில்லை.. எஜமானர்களும் இல்லை! திருமாவளவனுக்கு அதிமுக செல்லூர் ராஜு பதிலடி!
மதுரை: ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் வளர்வதற்கு அதிமுக வாய்ப்பளித்தால் அது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என விமர்சித்திருந்தார் விசிக தலைவர் திருமாவளவன். இந்த நிலையில் தங்களுக்கு யாரும் எஜமானர்கள் கிடையாது, நாங்கள் யாருக்கும் அடிமை கிடையாது என பதிலடி கொடுத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில், ஆர்எஸ்எஸ் அதிமுகவை வழி நடத்துவதாகவும், சிறிது சிறிதாக அதிமுக ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு பகுதியாக மாறி வருவதாக திமுக கூட்டணி விமர்சித்து வருகிறது.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆர்எஸ்எஸ் அதிமுகவை வழிநடத்தினால் என்ன தவறு என கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக அதிமுக தொண்டர்களே கடும் எதிர்வினைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக பாஜக
இதனால் அதிமுக பாஜக இரு கூட்டணியில் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக பேசியிருந்த விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன், அதிமுக பெரியார் பாசறையில் வளர்ந்த இயக்கம் எனவும், ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளுக்கு எடப்பாடி பழனிசாமி ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு கொடுப்பது அதிர்ச்சி அளிக்கிறது எனக் கூறியிருந்தார். மேலும், ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் வளர்வதற்கு அதிமுக வாய்ப்பளித்தால் அது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என விமர்சித்திருந்தார்.
செல்லூர் ராஜு
இந்த நிலையில் தங்களுக்கு யாரும் எஜமானர்கள் கிடையாது, நாங்கள் யாருக்கும் அடிமை கிடையாது என பதிலடி கொடுத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. இது தொடர்பாக பேசிய அவர், இந்த திமுக அமைச்சர்கள் மதுரைக்கு என்ன கொண்டு வந்தார்கள். சகோதரர் திருமாவளவன் திசை மாறி எங்கோ சென்றுவிட்டார். அவர் கருத்துக்கெல்லாம் பதில் கூறுவது சரியாக இருக்காது. அதிமுக என்றும் தனது கொள்கையிலிருந்து மாறாது.
திருமாவளவன்
எங்களுக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் ஜெயலலிதா, இபிஎஸ் ஆகியோர் வழியில் நாங்களும் இருக்கிறோம். எங்களுக்கு யாரும் எஜமானர்கள் கிடையாது. நாங்கள் யாருக்கும் அடிமை கிடையாது. மேற்குத் தொகுதியில் நிச்சயம் மேற்குப் பகுதியில் சூரியன் உதிக்கும் என்று அமைச்சர் மூர்த்தி சொல்லி வருகிறார். இந்தத் தேர்தல் முடிந்த பிறகு அமைச்சர் மூர்த்தி எங்கே இருக்கப் போகிறார் என்று பார்ப்போம். அவர் ஸ்வீடன் போன்ற மேலை நாடுகளுக்குச் சென்றது போலப் பேசுகிறார்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
மேற்கில் நிச்சயம் சூரியன் உதிக்காது. மேற்குத் தொகுதியில் தற்போது அமைச்சர் மூர்த்தி புதிதாக டிபன் பாக்ஸைக் கொடுத்து வருகிறார். பதவியிறக்கம் செய்யப்பட்டவுடன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சைலன்ட் மோடுக்குச் சென்றுவிட்டார். வரும் தேர்தலில் அவர் போட்டியிடுவாரா இல்லையா என்று தெரியவில்லை. உங்கள் பொங்கல் சோறும் வேண்டாம். இந்தப் பூசாரித்தனமும் வேண்டாம் என்பது போல அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார்.
மதுரை மாநகராட்சி மேயர்
கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா? கணவர் தவறு செய்யும் பட்சத்தில் நிழல் நேராக இருந்து செயல்பட்டவரை கைது செய்த நிலையில், மாநகராட்சி மேயரை நீக்கம் செய்யாதது ஏன்? மதுரையில் இருக்கக்கூடிய இந்த இரண்டு அமைச்சர்களுடைய செயல்பாடுகள் தான் என்ன? எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications