அதிமுகவுக்கு வேறுவழியே இல்லை! எடப்பாடியின் பலவீனம் இது தான்! ரவீந்திரன் துரைசாமியின் அரசியல் கணக்கு
சென்னை: அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ள நிலையில் இதன் அடுத்தக் கட்டம் என்னவாக இருக்கும் என்பது பற்றி அரசியல் பார்வையாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசியது, அவர் கூறியதை இங்கே பார்க்கலாம்.
''பாஜக தேசியத் தலைமையின் கண் அசைவுக்கேற்ப தான் அண்ணாமலை தமிழ்நாட்டில் களமாடிக் கொண்டிருக்கிறார். அண்ணாமலையை தமிழகத்தில் ஒரு பெரிய தலைவராக உருவெடுக்க வைக்கும் முயற்சியில் பாஜக மேலிடம் ஈடுபட்டுள்ளதாக கருதுகிறேன். அண்ணாமலையின் அண்மைக்கால செயல்பாடுகளை இதைத் தான் காட்டுகின்றன.''

''பாஜகவை விட்டால் அதிமுகவுகு வேறு வழியே இல்லை என்பது தான் உண்மை. பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லாமல் அதிமுகவால் தேர்தலை சந்திக்க முடியாது. மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுகொள்வதில் எடப்பாடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஏற்றுக்கொண்டும் விட்டார். இப்படி லாக் ஆகிவிட்டதை தான் எடப்பாடி பழனிசாமியின் பலவீனமாக பார்க்கிறேன். இந்த பலவீனத்தை தான் அண்ணாமலை தனக்கான அட்வாண்டேஜாக எடுத்துக் கொள்கிறார்.''
''காங்கிரசும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம் என அன்று ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டை இன்று சீமான் எடுத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியால் சீமானை போல் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாது. அதிமுகவுக்குள் இருக்கும் சாதி முரண்பாட்டை மறைக்க பாஜகவின் தயவு தேவை. அண்ணாமலையும், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பேசுவதை வைத்தெல்லாம் அதிமுக பாஜக கூட்டணி முறிந்துவிடும் என்று சொல்ல முடியாது.''
''எடப்பாடி பழனிசாமியோ, ஜே.பி.நட்டாவோ, அமித்ஷாவோ இது குறித்து பேசினால் தான் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இப்போது நடப்பதெல்லாம் வாடிக்கையான அரசியல் நிகழ்வு என்பதே எனது கருத்து.''












Click it and Unblock the Notifications