அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்.. சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு பதில்
சென்னை: அதிமுக தலைமை அலுவலம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக அளித்த புகாரில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவும் செய்யப்பட்டதாக குறிபிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கும் ஏற்பட்ட தகராறால், இரு தரப்பினருக்கும் சுவாதீன பிரச்சனை இருந்ததாகவும், அதன்படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கபட்டதாகவும், ஆனால் அவ்வாறு எந்த பிரச்சனையும் இல்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம்
அந்த சீலை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அதிமுக அலுவலகத்திற்குள் தாங்கள் சென்றபோது, அலுவலகத்தை திறந்து பார்த்த போது சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளா. ஜூலை 11ல் புகுந்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது.

ராயப்பேட்டை காவல் நிலையம்
இதுதொடர்பாக மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் அளித்த புகாரை பெற்றுக் கொண்ட ராயப்பேட்டை காவல் நிலையத்தினர், ஒப்புகை சீட்டு கூட வழங்கவில்லை எனவும், உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பிறகே புகாரை பெற்றதற்கான சான்று கிடைக்கப் பெற்றதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு
ஜூலை 23ஆம் தேதி புகார் அளித்தும், புகாரை காவல்துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை எனவும், ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வருவதால், புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு
இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம், ஆவணங்கள் சூறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக கூறி, அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்தார். இதைபதிவு செய்த நீதிபதி, வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது குறித்து தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications