பரபர சூழலில் இன்று அதிமுக மா.செக்கள் கூட்டம்.. ராஜ்யசபா வேட்பாளரை தேர்வு செய்ய ஆலோசனை!
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (மார்ச் 4) அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு குறித்து அதிமுக ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும், சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக இறுதி செய்து வருகிறது. ஒரு ஆண்டுக்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணியை வலுப்படுத்த இரண்டு கட்சிகளும் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன.

குறிப்பாக கூட்டணி கட்சிகளை இணைப்பது, தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை உள்ளிட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இதுவரை பாமக, அமமுக தவிர வேறு எந்த ஒரு பெரிய கட்சிகளும் சேரவில்லை.
தமிழக பாஜக பொறுப்பாளராக உள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் எடப்பாடி பழனிசாமி உடன் ஆலோசனை மேற்கொண்டார். அதிமுக பாஜக கூட்டணியை பலப்படுத்துவது, தற்போதைய அரசியல் கள நிலவரம் குறித்தும், அதிமுக - பாஜக நிர்வாகிகள் கூட்டாக சேர்ந்து தேர்தல் நேரத்தில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை மேற்க்கொள்ளபட்டது.
ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார். எனினும் பாஜக -அதிமுக தலைவர்கள் இடையே மறைமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் சார்பில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதில் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படாததால் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது, அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
இந்த சூழலில், அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிற்பகல் 3.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளார்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடையும் நிலையில் ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. எனவே இன்றைய கூட்டம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications