ஸ்டார்ட் மியூசிக்..தேர்தலுக்கு ர.ர.கள் ரெடி.. அடித்தாடும் அதிமுக! என்னென்ன பன்றாங்க பாருங்க!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் தற்போதே தேர்தல் வேலையை ஆரம்பித்திருக்கிறது அதிமுக. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திண்ணைப் பிரச்சாரம், எடப்பாடி முதல்வராக வேண்டி பால்குடம் எடுப்பது, ஆர்ப்பாட்டம், போராட்டம் என தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் வரும் காலங்களில் அதிமுகவினரின் செயல்பாடுகள் இன்னும் சூடு பிடிக்கும் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுகவும் திமுகவும் தயாராகி வருகிறது. ஒருபுறம் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்திருக்கின்றன. மறுபுறம் தேர்தலை எதிர்கொள்ள பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட செயல்களில் பிரதான அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இது ஒரு புறம் இருக்க 2021 இல் ஆட்சியை இழந்த அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம், திண்ணை பிரச்சாரம், பால்குடம் எடுப்பது, காவடி எடுப்பது, அன்னதானம், கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு என பல்வேறு செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பழனியில் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டி 501 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பழனி மலை அடிவாரத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். மேளதாளத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பெண்கள் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பெண்கள் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய வந்தவர்களுக்கு அதிமுக பழனி நகர்மன்ற உறுப்பினர் நடராஜ் அன்னதானம் வழங்கினார். சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதேபோல், திருப்பூர் மாநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் மாவட்டம் முழுவதும் இல்லந்தோறும் மாபெரும் திண்னை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எஸ்ஏபி பகுதியில் அதிமுக திண்னை பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி.V.ஜெயராமன் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள டீ கடையில் மக்களோடு மக்களாக அமர்ந்து டீ அருந்தி திண்னை பிரச்சாரம் செய்தனர். மேலும் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் டீக்கடைகளில் சென்றும், வாகன ஓட்டிகளுக்கும் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அப்போது பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசுகையில்,"சட்டசபையில் திமுக ஆட்சி குறித்து புகழாரம் மட்டுமே செய்யப்படுகிறது, மக்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சட்டசபையில் விசைத்தறியாளர்களின் போராட்டம் குறித்து பேச முயற்சித்த போது அவர்கள் அதை மறுத்தனர். கடந்த ஒரு மாத காலமாக விசைத் தரியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது வரை திமுக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
சனாதன தர்மத்தை பேசியதால் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆனார். அவர் வழியில் வந்த பொன்முடி பெண்களை இழிவாக பேசியுள்ளார். பொன்முடியால் தமிழ்நாடு முதல் கன்னியாகுமரி வரை அனைத்து பெண்களும் கொந்தளித்து உள்ளனர். திமுகவின் செயல் இந்தியாவில் மதக்கலவரத்தை உண்டாக்குகிறது. நமது குடும்பத்தார் பாதுகாப்பாக வெளியே சென்று வீட்டுக்கு வர வேண்டுமென்றால் 10 அமாவாசைக்குள் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications