எடப்பாடி பழனிசாமிக்கு என்னாச்சு? 2 நாட்களாக உடல் சோர்வு! இன்று நடைபெற்ற மருத்துவ பரிசோதனை!
சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரபல ஆய்வகத்தில் இன்று காலை மருத்துவ பரிசோதனை செய்துக் கொண்டார்.
கடந்த 2 நாட்களாக உடல் சோர்வும் லேசான மயக்கமும் இருந்ததால் எடப்பாடி பழனிசாமிக்கு சர்க்கரை பரிசோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன் தினம் மின்கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மேடையிலேயே எடப்பாடி பழனிசாமி மயக்கமுற்றது குறிப்பிடத்தக்கது.

அதிமுக ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து புதன்கிழமை காலை 10 மணிக்கு அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 11 மணிக்கு தான் மேடைக்கே வந்தார் எடப்பாடி பழனிசாமி. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் அவரால் மேடையில் நிற்க முடியவில்லை. இருப்பினும் சமாளித்துப் பார்த்த அவர் ஒரு கட்டத்தில் மயங்கிய நிலைக்கு சென்றார். இதையடுத்து பதறிப்போன அதிமுக நிர்வாகிகள் தண்ணீரை குடிக்க கொடுத்து துண்டால் வீசி விட்டனர்.

உடல் பரிசோதனை
இதையடுத்து அப்படியே சமாளித்துக் கொண்டு எழுந்த எடப்பாடி பழனிசாமி மேடையில் தோன்றி தொண்டர்களை பார்த்து கை அசைத்துவிட்டு அங்கிருந்து உடனடியாக புறப்பட்டார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாகவே வீட்டில் இருக்கின்ற போதும் உடல் அசவுகரியத்துடன் இருந்திருக்கிறது. குடும்பத்தினர் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள வலியுறுத்திய பிறகு அதற்கு ஒப்புக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அதனடிப்படையில் இன்று காலை மயிலாப்பூரில் உள்ள பிரபல ஆய்வகத்தில் உடல் பரிசோதனை செய்துகொண்டார்.

பிரதமரை வரவேற்க
நேற்று பிரதமர் மோடியை வரவேற்பதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்ற போதும் கூட உடல் அசவுகரியத்துடன் தான் எடப்பாடி பழனிசாமி சென்றிருக்கிறார். தொடர்ந்து வழக்குகள், உட்கட்சி பிரச்சனை, என பல்வேறு விவகாரங்கள் காரணமாக அவருக்கு ஸ்ட்ரஸ் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே மயக்கம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

ஓய்வு தேவை
எடப்பாடி பழனிசாமியை ஒரு வார காலமாவது ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவரை காண காலையிலும் மாலையிலும் நூற்றுக்கணக்கான கட்சி நிர்வாகிகள் திரள்வது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications