"சண்டைக்கு வாங்க".. பாஜகவை விடாமல் சீண்டும் அதிமுக.. உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகிறதா?
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் எண்ணத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறிக்க அதிமுக பாஜகவை சீண்டி வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் ஜெயலலிதா கூட்டணி வைக்கவில்லை. இந்த நிலையில் ஜெயலலிதா மறைந்தவுடன் கடந்த 2019ஆம் ஆண்டு பாஜகவுடன் அதிமுக கூட்டணி ஏற்படுத்திக் கொண்டது.
நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் திட்டம், குடியுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்ட பாஜகவின் மக்கள் விரோத திட்டங்களால் தமிழகத்தில் மக்கள் கொதிப்படைந்திருந்தனர். இதே ஜெயலலிதா, கருணாநிதி இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு உள்ளே வரவில்லை.

அதிமுக
இதனால் பாஜகவுடன் இணைந்த அதிமுகவுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டினார்கள். 38 எம்பி தொகுதிகளில் வெறும் 1 தொகுதியில் மட்டுமே அதிமுக வென்றது. மற்ற அனைத்திலும் அதிமுக- பாஜக கூட்டணி தோல்வியடைந்தது.

பாடம் கற்காத அதிமுக
இதிலிருந்து பாடம் கற்காத அதிமுக 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது சீட் பேரம் நடந்த போதும் நீட் தேர்வை கைவிட வேண்டும் என பாஜகவுக்கு அதிமுக நிர்பந்திக்கவே இல்லை. மேலும் 8 வழிச்சாலை திட்டத்திற்கும் அதிமுக ஆதரவு தந்தது.

விவசாயிகளின் கோபம்
இதன் மூலம் விவசாயிகளின் கோபத்திற்கு அதிமுக உள்ளானது. இதையடுத்து கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அதிமுக செய்த சாதனைகள், பாஜக செய்த திட்டங்கள் மூலம் நிச்சயம் 3ஆவது முறையாக தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என அதிமுக எதிர்பார்த்தது. ஆனால் ஏமாற்றமே விஞ்சியது.

அதிமுக தோல்விக்கு காரணம்
இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே அதிமுக தோல்விக்கு காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் இன்று பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவி சண்முகம் ஏன் இவ்வாறு பேசினார் என்பதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஓபிஎஸ் மகன்
ஒன்று மத்திய அமைச்சரவையில் ஓபிஎஸ் மகனுக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடாது. இரண்டாவது பாஜகவை எப்படியாவது கூட்டணியில் இருந்து கழற்றிவிட வேண்டும் என்பதாகும். ஏற்கெனவே இரு முறை பட்ட அடிகளே போதும். மீண்டும் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து மண்ணை கவ்வ வேண்டாம் என அதிமுகவின் (ஒரு) தலைமை கருதுகிறது.

சிவி சண்முகம்
இதன் வெளிப்பாடே சிவி சண்முகத்தை ஏவி பாஜகவுக்கு கோபத்தை ஊட்டும் வகையில் பேச வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பாஜக மீது பழியை போட்டு வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட அதிமுக நடத்தும் நாடகமாகவே சிவிஎஸ்ஸின் பேச்சு தெரிகிறது.












Click it and Unblock the Notifications