பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருக்கிறது.. ஓபிஎஸ் கூறிய கருத்துக்கு அண்ணாமலை என்ன சொன்னார் பாருங்க
சென்னை: அதிமுக பாஜகவுடன் தான் கூட்டணியில் இருக்கிறது என்று தொடர்ச்சியாக ஓ பன்னீர் செல்வம் கூறி வரும் நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு போன்ற வேலைகளை செய்து வருகிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் தேர்தலை சந்திக்கும் என தெரிகிறது. ஏனென்றால் பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார்.

எனினும் அதிமுக தனக்கு தான் சொந்தம் என்று கூறி வரும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அதிமுக பாஜகவுடன் தான் கூட்டணியில் இருக்கிறது என்றும், எடப்பாடி பழனிசாமிதான் பிரிந்து சென்று விட்டார் என்றும் கூறினார். இதேபோல் கடந்த 4 அரை ஆண்டு கால அதிமுக ஆட்சி பாஜகவின் தயவினால் தான் தொடர்ந்து நடந்தது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆன போது தான் அதிமுக 5 ஆக உடைந்தது என்றும் ஓ பன்னீர் செல்வம் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஓ பன்னீர் செல்வம் பேசியது தொடர்பாக அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அண்ணாமலை கூறியதாவது:- இன்னொரு கட்சியுடனுடைய உட்கட்சி பிரச்சினை பற்றி நாங்கள் பேச மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம். 2017, 2018, 2019, 2020 2021ம் ஆண்டு காலக்கட்டத்தில் அந்த கட்சி எப்படி இருந்தது, அப்போது நாங்க இல்லை, நான் பொறுப்பல்ல, பாஜக கட்சி பொறுப்பல்ல.
அதை உள்ளே இருந்து பார்க்கிறவங்க சொல்கிறாங்க என்றால் அது அவரது தனிப்பட்ட கருத்து. எங்களை பொறுத்தவரை இன்னொருடைய கட்சியினுடைய பிரச்சினையில் நாங்கள் குளிர்காய விரும்பவில்லை என்பதை நாங்க முதலில் இருந்தே தொடர்ச்சியாக சொல்லி வருகிறோம். ஓ பன்னீர் செல்வம் உள்ளே இருந்து அந்த பிரச்சினையை பார்த்து இருக்காங்க.. அதை வைத்து அவர் கருத்து சொல்கிறார். எனவே இது அவருடைய கருத்து. அவர்கிட்ட தான் கேட்க வேண்டும்.
பாஜகவை பொறுத்தவரை இன்னொரு கட்சி பிரச்சினையில் தலையிடாது. தொடர்ந்து பிரதமர் மோடி மீது மிகப்பெரிய அனுமானமும், மரியாதையும் வைத்திருக்கக்கூடியவர் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம். பிரதமர் மோடி மறுபடியும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறி வருகிறார். இதற்காக ஓ பன்னீர் செல்வத்திற்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணியில் இருந்து வருவதாக ஓ பன்னீர் செல்வம் கூறியிருப்பது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அண்ணாமலை கூறுகையில், "நாளைக்கு தேசிய தலைவர் ஜேபி நட்டா சென்னை வருகிறார். கூட்டத்தில் ஜே பி நட்டா பங்கேற்கிறார். இதற்கு பிறகு கூட்டணி பற்றி நான் சொல்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications